சிங்கப்பூரில் சிறுபான்மைச் சமூகங்களும் அரவணைக்கப்பட்டு, கொண்டாடப்படுவது அதன் ஒற்றுமையைப் பறைசாற்றுவதாக உள்ளது என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்திருக்கிறார்.
சிங்கப்பூர் சீக்கிய சமூகம் நான்காண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் எக்ஸ்போவில் 'நாம் ராஸ் கீர்த்தன் தர்பார்' எனும் விழாவைக் கொண்டாடியது. இசைக் கச்சேரிகள், கண்காட்சி மூலமாக சீக்கிய கலாசாரத்தையும் மரபையும் பொதுமக்கள் அறிந்துகொள்வதை இலக்காகக் கொண்டு, ஈராண்டுகளுக்கு ஒருமுறை இந்த நான்கு நாள் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதுதான் இவ்வட்டாரத்தில் இடம்பெறும் சீக்கிய சமூகத்தின் ஆகப் பெரிய ஒன்றுகூடல் நிகழ்வு.
விழாவின் இரண்டாம் நாளான கடந்த சனிக்கிழமையன்று சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
"சிங்கப்பூரில் ஒவ்வொரு சமூகத்திற்கும் சிறப்பான இடம் உள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதிலும், ஒரு சிறுபான்மை இனத்திலும் சிறுபான்மைச் சமூகமாக சீக்கிய சமூகம் திகழ்வது அதற்குரிய இடத்தை மேலும் சிறப்பானதாக்குகிறது," என்றார் திரு தர்மன்.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு இவ்விழா இடம்பெறாததால் இவ்வாண்டு நிகழ்ச்சி சிறப்புக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பதினைந்தாம் நூற்றாண்டில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய சமயம் தோன்றியது. சிங்கப்பூரில் இப்போது ஏறத்தாழ 15,000 சீக்கியர்கள் உள்ளனர்.
பத்தாவது முறையாக நடத்தப்பட்ட 'நாம் ராஸ்' நிகழ்ச்சிக்குத் தென்கிழக்காசியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர் என எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர். இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து சீக்கிய சமூகப் பிரபலங்களும் வருகையளித்தனர்.
அவ்வகையில், பிரிட்டனைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் அமன்தீப் சிங், 36, இம்முறை 'நாம் ராஸ்' நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். 'இன்கிவிசிட்டிவ்' என்று அழைக்கப்படும் அவர், சீக்கியக் கலாசாரம், வரலாறு ஆகியவற்றின் பின்னணியில் ஓவியம் வரைந்து வருகிறார். தமது கைவண்ணத்தில் திரு தர்மனைப் படமாக வரைந்து, அதை அவருக்குப் பரிசாக வழங்கி வியப்பளித்தார் திரு அமன்தீப்.

