தைவானில் இப்போது நான்கு மாதங்களாக இருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சிக்காலம் ஓராண்டாக உயர்த்தப்படவுள்ளது.
சீனாவுடன் பதற்றம் நீடித்துவரும் நிலையில், போருக்கு தயாராக இருக்கும் நிலையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக தைவான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
"ஆகஸ்ட்டில் இடம்பெற்ற சீனாவின் ராணுவப் பயிற்சிக்குப் பிறகு, அந்நாட்டின் அச்சுறுத்தல் இன்னும் மோசமாகிவிட்டது," என்று நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது தைவான் அதிபர் சை இங் வென் குறிப்பிட்டார்.
யாரும் போரை விரும்புவது இல்லை என்ற அவர், ஆனாலும் அமைதியானது வானத்திலிருந்து விழுவதில்லை என்றும் சொன்னார்.
கட்டாய ராணுவப் பயிற்சி மேம்படுத்தப்படும் என்று உறுதி அளித்துள்ள அதிபர் சை, துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியும் போர்ப் பயிற்சியும் அதிக அளவில் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
ஓராண்டுக் கட்டாய ராணுவப் பயிற்சி 2024ஆம் ஆண்டிலிருந்து நடப்பிற்கு வரும். 2005 ஜனவரி 1ஆம் தேதி அல்லது அதற்குப்பின் பிறந்த தைவானிய ஆண்கள் இவ்விதிக்கு உட்பட்டாக வேண்டும்.
அவர்களுக்கான ஊதியமும் கிட்டத்தட்ட நான்கு மடங்காக உயர்த்தப்படவுள்ளது. இப்போது கட்டாய ராணுவ சேவையின்போது மாத ஊதியமாக 6,510 நியூ தைவான் டாலர் (S$285) வழங்கப்பட்டு வரும் நிலையில், அது 26,307 நியூ தைவான் டாலராக (S$1,151) உயர்த்தப்பட இருக்கிறது.
தைவானைத் தன்னிடமிருந்து பிரிந்த பகுதியாகக் கருதும் சீனா, அதனை மீண்டும் தன்னுடன் ஒன்றிணைக்க முயல்கிறது. அந்நோக்கத்துடன் சீனா அண்மைய மாதங்களாக தைவான் மீதான ராணுவ நெருக்குதல்களையும் அதிகப்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் நேன்சி பெலோசி கடந்த ஆகஸ்ட் மாதம் தைவான் சென்றது சீனாவிற்கு ஆத்திரமூட்டியது. அவரது பயணத்தை வன்மையாகக் கண்டித்த சீனா, தைவான் தீவிற்கு மேலே ஏவுகணைகளைப் பாய்ச்சியது உட்பட அந்நாட்டைச் சுற்றி பல்வேறு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது.
சீனாவையும் தைவானையும் பிரிக்கும் தைவான் நீரிணையைத் தாண்டி சீனப் போர்க்கப்பல்கள் செல்வதும் போர் விமானங்கள் பறப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இதனையடுத்து, தைவானில் 20 வயதான அல்லது அதற்குமேல் வயதுடையவர்களிடம் நடத்தப்பட்ட கருத்தாய்வில், கிட்டத்தட்ட 73 விழுக்காட்டினர் கட்டாய ராணுவ சேவையை ஓராண்டாக உயர்த்துவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆயினும், கட்டாய ராணுவ சேவையை நீட்டிப்பது போரின்போது எந்த அளவிற்கு உதவும் என்பதில் சந்தேகமிருப்பதாகப் பதின்ம வயதினர் பலரும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.
"கற்றுக்கொள்ளப்போவது அதிகமில்லை என்பதால் தைவானில் ராணுவப் பயிற்சி என்பது முற்றிலும் வீண்செயல்," என்று சொன்னார் உயர்நிலைப் பள்ளி மாணவரான லியாவ் குவோ சென், 16.
இருந்தாலும், "உக்ரேனில் நிகழ்ந்ததைப் பார்க்கும்போது, போர் அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான் என்பதை உணரலாம். அதனால், எங்களது ராணுவப் பயிற்சியில் மாற்றங்கள் இடம்பெறுவதைத் தவிர்க்க முடியாது," என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் தைவானின் உறுதிப்பாட்டை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளதால், அவற்றைச் சரியான திசையை நோக்கிய நல்ல முயற்சி என்று தற்காப்பு வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
"தைவான் தனது கட்டாய ராணுவப் பயிற்சிக் காலத்தை அதிகரிக்கவில்லை எனில், தன்னைத் தற்காத்துக்கொள்வதில் தைவானின் நிலை குறித்து அமெரிக்காவும் மற்ற நாடுகளும் வன்மையாகக் கேள்வியெழுப்பும். தைவானைப் பொறுப்பற்ற நாடாக அவை பார்க்கக்கூடும்," என்று தைவானின் தேசிய தற்காப்பு, பாதுகாப்பு ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சென் லியாங் சி கூறினார்.
தைவானில் முன்னர் ஈராண்டாக இருந்த கட்டாய ராணுவப் பயிற்சிக்காலம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, கடந்த 2013ஆம் ஆண்டில் நான்கு மாதங்கள் என்ற நிலையை எட்டியது.
இப்போதைக்கு, தைவானில் தொழில்முறை ராணுவப் படையினரின் எண்ணிக்கை 162,000 ஆக இருக்கிறது. இது அதன் இலக்கைக் காட்டிலும் 7,000 குறைவு.

