சிங்கப்பூர் பங்குச்சந்தையில் தந்திரமாக ஏமாற்றி கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபரில் பங்கு விலை கிட்டத்தட்ட 8 பில்லியன் வீழ முக்கிய காரணமாக இருந்த ஜான் சோ சீ வென்னுக்கு 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவருடன் சேர்ந்து திட்டமிட்ட 58 வயது குவா சூ-லிங்குக்கு 20 ஆண்டுகள் சிறையை உயர் நீதிமன்றம் நேற்று விதித்தது.
இருவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் 200 நாள்களாக வழக்கு விசாரணை நடைபெற்றது. இருவருக்கும் எதிராக 349 குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இவ்வாண்டு மே மாதம் இருவரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அரசாங்க வழக்கறிஞர்கள் சோக்கு 40 ஆண்டுகளும் குவாவுக்கு பத்தொன்பதரை ஆண்டுகளும் சிறைத்தண்டனையாக கோரி இருந்தனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கும் 2013ஆம் ஆண்டு அக்டோபருக்கும் இடையே, புளுமோண்ட் குழுமம், ஏஷியாசன்ஸ் கேப்பிடல் குழுமம், லயன்கோல்ட் குழுமம் ஆகியவற்றின் பங்கு விலைகளை அவர்கள் தந்திரமாக ஏறச் செய்தனர்.
அந்த ஏமாற்று வேலைக்காக அவர்கள் 187 பங்கு வர்த்தகக் கணக்குகளை 20 நிதி நிறுவனங்களில் வைத்திருந்தனர். அந்தக் கணக்குகள் 58 தனிநபர்கள், நிறுவனங்களின் பெயர்களில் இருந்தன.
மலேசிய வணிகரான சோ, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து தடுப்புக்காவலில் இருக்கிறார். அவர் இதுவரை காவலில் இருந்துள்ள காலமும் சிறைத்தண்டனையில் சேர்த்துக் கொள்ளப்படும்.
அவரது தொழில் பங்காளியான குவா, தற்போது 4 மில்லியன் வெள்ளிப் பிணையில் வெளியில் இருக்கிறார்.
குவாவுக்கான சிறைத் தண்டனையை தீர்மானித்தபோது, அந்தத் திட்டத்தில் அவருக்குக் குறைவான பங்கும் பொறுப்பும் இருந்ததாக உயர் நீதிமன்ற நீதிபதி ஹூ ஷியூ பெங் கூறினார். அதனால் சோவுக்கு விதிக்கப்பட்டதில் மூன்றில் இரண்டு பங்கு தண்டனையை குவாவுக்கு விதிப்பதாக அவர் தெரிவித்தார்.
இருவரும் திட்டத்தை பெரிய அளவில் செயல்படுத்தியதாகவும் அவர்களுக்கு நிதிச் சந்தைகள் செயல்படும் முறை நன்கு புரிந்திருந்தது என்றும் நீதிபதி ஹூ குறிப்பிட்டார். தங்கள் லாபத்துக்காக 14 மாதங்களுக்கு அவர்கள் நிதி கட்டமைப்பை ஏமாற்றினார்கள். பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்து தங்கள் திட்டம் தோற்ற பின்னரும் அவர்கள் நீதி நிலைநாட்டப்படுவதைத் தடுத்தார்கள்.
"அவர்களின் குற்றம் எவ்வளவு பெரிது என்பதைக் காட்ட, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆக அதிகமான தண்டனையை விதிப்பது அவசியமானது, முக்கியமானது," என்றார் நீதிபதி ஹூ.

