கொவிட்-19 கிருமித்தொற்று இல்லை என்ற பரிசோதனை முடிவு ஜனவரி 1 முதல்
சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங், சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆகிய நாடுகளிலிருந்து ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து இந்தியா செல்வோர், தங்களுக்கு 'கொவிட்-19 தொற்று இல்லை' என்ற பரிசோதனை முடிவை வழங்க வேண்டும் என்று இந்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்த நாடுகளிலிருந்து இந்தியா செல்வோர், பயணத்துக்கு முன்பு 'ஏர் சுவிதா' இணையத்தளத்தில் பரிசோதனை முடிவுகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டுவிட்டரில் அவர் கூறினார்.
"உலகம் முழுவதும், குறிப்பாக, மேற்கண்ட இந்த நாடுகளில் உள்ள கொவிட்-19 நிலவரத்தைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது," என்று இந்திய சுகாதார அமைச்சு அதன் அறிக்கையில் கூறியது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் பரிசோதனையைச் செய்திருக்க வேண்டும் என்று அமைச்சு விளக்கியது. இந்தியாவைச் சென்றடையும் அனைத்துலகப் பயணிகளில் இரண்டு விழுக்காட்டினர் மீது கிருமி பரிசோதனை மேற்கொள்ளப்படுவதற்குக் கூடுதலாக இந்தப் புதிய கொவிட்-19 பரிசோதனை நடைமுறையும் சேர்க்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொவிட்-19 பரிசோதனையைக் கட்டாயமாக்குவதில் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, தைவான் ஆகிய நாடுகளுடன் இப்போது இந்தியாவும் சேர்ந்துள்ளது.
இந்தியாவில் புதிதாக 268 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சின் நேற்றைய தரவு தெரிவிக்கிறது. டிசம்பர் 2ஆம் தேதிக்குப் பிறகு பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது.
அடுத்த 40 நாள்களில் இந்தியாவின் கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் முன்னுரைத்துள்ளனர். இந்நிலையில் மக்கள் விழிப்புநிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
ஓமிக்ரான் கிருமியின், 'பிஎஃப்.7' துணைத் திரிபால் தற்போது இந்தியாவில் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாவதாகக் கூறப்படுகிறது. இதில் மிதமான பாதிப்பே இருந்தாலும், கிருமி அலையை ஏற்படுத்தும் தன்மை இந்தத் துணைத் திரிபுக்கு உண்டு என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், இது தொற்றக்கூடிய சாத்தியம் அதிகம் என்று சுகாதார அமைச்சு கூறுகிறது.
இந்நிலையிலும், சீனா போன்ற மோசமான கொவிட்-19 நிலவரம் இந்தியாவில் ஏற்படாது என்று நிபுணர்கள் உறுதியளித்துள்ளனர்.
தொடர்ந்து, நாடளவில் மருத்துவமனைகளிலும் சுகாதாரப் பராமரிப்பு வளாகங்களிலும் பாவனைப் பயிற்சிகள் நடந்துவருகின்றன.
இதற்கிடையே, புதிய கிருமித்தொற்று அலையால் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் கொவிட்-19 கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ளதற்கு ஏற்ப எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த உயர்மட்ட சுகாதார அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

