ஆர்ச்சர்ட் சாலையில் கடந்த ஆண்டு கலப்பின தம்பதியரிடம் இனவாதக் கருத்துகள் கூறிய நீ ஆன் பலதுறைத்தொழிற்கல்லூரியின் முன்னாள் மூத்த விரிவுரையாளர் டான் பூன் லீக்கு நேற்று ஐந்து வாரச் சிறைத்தண்டனையும் $6,000 அபராதமும் விதிக்கப்பட்டன.
அவர் இனவாதக் கருத்துகளைக் கூறியதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலானது.
முன்னதாக டான், 61, இரு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இனரீதியாக தனிமனிதரின் உணர்வுகளைக் காயப்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டையும் ஆபாசப் படங்களை வைத்திருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார்.
நீ ஆன் பலதுறைத்தொழிற்கல்லூரியின் பொறியியல் துறையில் விரிவுரையாளராக இருந்த டான், 2021 ஜூன் 5ஆம் தேதி, திரு தேவ் பர்காஷ் என்பவரை நோக்கி இனவாதக் கருத்துகளைக் கூறினார்.
சிங்கப்பூரரான திரு பர்காஷ், பாதி இந்திய, பாதி பிலிப்பீனோ இனத்தைச் சேர்ந்தவர். அப்போது தம்முடைய காதலி ஜேக்குலின் ஹோவுடன் அவர் இருந்தார்.
ஆர்ச்சர்ட் பொலிவார்ட்டில் உள்ள கார் நிறுத்துமிடத்தை நோக்கி அந்தத் தம்பதி நடந்து சென்றுகொண்டிருந்தபோது டானும் அவர்களும் சந்திக்க நேரிட்டது.
“என்ன ஓர் அவமானம், இந்திய ஆடவருடன் சீனப் பெண்,” என்று தம்பதியை நோக்கி டான் கூறினார்.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தை குமாரி ஹோ காணொளியில் பதிவுசெய்தார். அந்த ஒன்பது நிமிடக் காணொளியை திரு பர்காஷ் ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.