எண் 21 துவாஸ் அவென்யூ 3ல் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 38 வயது இந்திய நாட்டவர் உயிரிழந்தார். 2022ஆம் ஆண்டில் வேலையிடத்தில் ஏற்பட்ட 46வது உயிரிழப்பு இது.
சம்பவ நாளில் காலை 9.25 மணிக்கு மூண்ட தீக்கு, அந்த வளாகத்தில் 'அசிட்டிலின்' எனும் எளிதில் தீப்பற்றக்கூடிய வாயு கட்டுக்கடங்காமல் வெளியேறியது காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக மனிதவள அமைச்சு கூறியது.
அதே நாளில் காலை 9.50 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்சம்பவத்தில் காயமுற்ற மற்றோர் ஊழியர் 43 வயது சீன நாட்டவர். அவர் சுயநினைவுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
தீப்பற்றக்கூடிய வாயு உருளைகளைச் சரிபார்ப்பது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தும்படி 'ஏஷியா டெக்னிகல் கேஸ்' நிறுவனத்திற்கு மனிதவள அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
"எளிதில் தீப்பற்றக்கூடிய வாயுக்களைக் கொண்ட கலன்களைக் கையாளும்போது, அவ்வாயு திரள்வதைத் தவிர்க்கவும் அந்த இடத்தில் தீப்பிடிக்கும் பொருள்கள் ஏதும் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்யவும் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்," என்று அமைச்சு அறிவுறுத்தியது.
வேலையிடத்தில் பாதுகாப்புக்கு முன்னுரிமை தரவேண்டும் என்பதை முதலாளிகளுக்கு நினைவுறுத்திய மனிதவள அமைச்சு, பெரிய அளவிலான பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் நிறுவனங்கள் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
அதன் தொடர்பில் அபராதம், வேலை நிறுத்த உத்தரவு, வெளிநாட்டு ஊழியரை வேலைக்கு அமர்த்துவதற்கு கட்டுப்பாடு போன்றவற்றை முதலாளிகள் எதிர்நோக்க நேரிடும் என்று அது நினைவுபடுத்தியது.
இந்தச் சம்பவத்தையும் சேர்த்து சென்ற ஆண்டு 46 வேலையிட மரணங்கள் பதிவாகின.
இந்த எண்ணிக்கை, 2016க்குப் பிறகு ஆக அதிகமாகும். அப்போது 66 வேலையிட மரணங்கள் பதிவாகியிருந்தன.

