ஆஸ்திரேலியாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் நால்வர் உயிரிழந்தனர்.
அவ்விரு ஹெலிகாப்டர்களில் இருந்த மற்ற ஒன்பது பயணிகளும் காயமடைந்தனர். அவர்களில் ஒரு பெண்ணும் இரு சிறுவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாண்டுபோன நால்வரும் படுகாயமடைந்த மூவரும் ஒரே ஹெலிகாப்டரைச் சேர்ந்தவர்கள் என்று குவீன்ஸ்லாந்து காவல்துறை ஆய்வாளர் கேரி வோரல் குறிப்பிட்டார்.
கோல்டு கோஸ்ட் பகுதியில் 'சீ வோர்ல்டு' கருப்பொருள் பூங்காவிற்கு அருகே நேற்று பிற்பகலில் இவ்விபத்து நிகழ்ந்தது.
ஒரு ஹெலிகாப்டர் மேலேஎழும்பத் தொடங்கிய நிலையில், இன்னொரு ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் இவ்விபத்து நிகழ்ந்ததுபோல் தெரிகிறது என்று குவீன்ஸ்லாந்து காவல்துறை தெரிவித்தது.
பத்திரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டரின் முன்பக்கக் கண்ணாடி நொறுங்கிவிட்டது. விபத்தில் சிக்கிய இன்னொரு ஹெலிகாப்டர் தலைக்குப்புறக் கவிழ்ந்தது நொறுங்கியது.
கடற்பகுதிக்குள் இருக்கும் மணற்திட்டில் ஹெலிகாப்டர்கள் விழுந்ததால் அங்கு செல்வது கடினமாக இருந்தது என்று திரு வோரல் குறிப்பிட்டார்.
நடுவானில் நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பில் ஆஸ்திரேலியப் போக்குவரத்துப் பாதுகாப்புச் செயலகம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

