இந்தியாவில் இன்னமும் கள்ளநோட்டுகள் புழங்குவதாகவும் அது பொருளியலுக்குப் பெரும் சவாலாகத் தொடர்வதாகவும் தேசிய குற்றச்செயல் கட்டுப்பாட்டு இலாகாவின் அறிக்கை கவலை தெரிவிக்கிறது.
அந்த நாட்டில் கள்ளநோட்டை ஒழிக்கும் நோக்கத்தில் 2016ல் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
அந்த நடவடிக்கையை சில நாள்களுக்கு முன் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாட்டில் பணப்புழக்கம் இரு மடங்காகி உள்ளதாக மத்திய வங்கியின் புள்ளிவிவரங்கள் கூறின.
இந்தியாவில் 2016ல் ரூ.17 லட்சம் கோடி மதிப்புள்ள நாணயம் புழக்கத்தில் இருந்தது. அது சென்ற ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி வாக்கில் ரூ.32.4 லட்சம் கோடியாக பெருகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2016க்குப் பிறகு நாட்டில் ரூ.245.33 கோடி மதிப்புள்ள கள்ளப்பணம் கைப்பற்றப்பட்டு இருப்பதாக அந்த இலாகா அறிக்கை தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டில்தான் ஆக அதிகமாக ரூ.92.17 கோடி மதிப்புள்ள கள்ளப்பணம் கைப்பற்றப்பட்டது.
இது பொருளியலுக்குப் பெரும் சவாலாக இருப்பதாக அறிக்கை கூறியது.