ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் உள்ள குடியிருப்புக் கட்டடங்களில் திங்கட்கிழமை மூண்ட தீயில் ஒருவர் இலேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 12எஸ் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் உள்ள கட்டடத்தில் தீப்பற்றி எரிவதாக இரவு 11 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. சம்பவ இடத்தை அடையும் முன்னர் தீ வேகமாகப் பரவியதில் அருகிலிருந்த நான்கு மொட்டை மாடிக் கட்டடங்களும் பாதிக்கப்பட்டன.
தீயணைப்பாளர்கள், பாதுகாப்புக் கருதி அந்தக் கட்டடங்களில் இருந்த 20க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை வெளியேற்றினனர். கட்டடங்களின் உச்சிக்குச் செல்லக்கூடிய அடுக்கு ஏணிகளைப் பயன்படுத்தி அவர்கள் தீயணைப்பு முயற்சிகளில் ஈடுபட்டனர். அதன் பலனாக பின்னிரவு 1.20 மணியளவில் தீ கட்டுக்குள் வந்தது. மேலும் இரு மொட்டை மாடிக் கட்டடங்களிலும் சேதம் காணப்பட்டது.
தீ அணைக்கப்பட்ட பிறகும் அனல் கக்கும் பகுதிகளின்மீது நீர் பீய்ச்சும் பணி தொடர்வதாக பின்னிரவு 2.40 மணியளவில் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டது. தீப்பிடித்ததற்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.

