நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தை சென்னை ரோகிணி திரையரங்கில் பார்க்கச்சென்ற ரசிகர் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்த லாரி மீது நடனம் ஆடியவாறே கீழே குதித்தபோது, 19 வயது இளையருக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாண்ட இளையர், சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவைச் சேர்ந்த பரத்குமார் என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
அஜித் நடித்துள்ள துணிவு, விஜய் நடித்துள்ள வாரிசு என இரு திரைப்படங்கள் நேற்று வெளியிடப்பட்டன. சிறப்புக் காட்சிகளைப் பார்ப்பதற்காக நள்ளிரவிலேயே இருதரப்பு ரசிகர்களும் திரையரங்குகள் முன்பு திரண்டிருந்தனர். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரு நடிகர்களின் திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளதால் அவர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.