ஜப்பானின் ஹொக்காய்டோ மாநிலத்தில் நடந்த கார் விபத்தில் 41 வயதான சிங்கப்பூர் மாது ஒருவரும் அவரின் நான்கு மாதப் பெண் குழந்தையும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமிஃபுரானோ நகரில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இவ்விருவரும் பயணம் செய்த கார், லாரி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதாக சீனமொழி நாளேடான சாவ்பாவ் தெரிவித்தது.
காரை மாதின் 44 வயதுக் கணவர் ஓட்டிச்சென்றதாகவும் விபத்தில் அந்த ஆடவரும் தம்பதியின் மூன்று வயது மூத்த மகளும் காயம் அடைந்ததாகவும் ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாகக் காவல்துறையினரை மேற்கோள்காட்டி சாவ்பாவ் தகவல் வெளியிட்டு உள்ளது,
கிளைச் சாலையிலிருந்து பனி நிறைந்த முக்கியச் சாலைக்குத் திரும்பியபோது கார், அந்த லாரியுடன் மோதியதாக ஏஎன்என் நியூஸ் செய்தி நிறுவனம் கூறியது.
விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.