சிங்கப்பூரில் பயங்கரவாதத் தொடர்புடைய குற்றத்துக்காக விசாரிக்கப்படும் முதல் அரசாங்க ஊழியர்
மோனலிசா
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கல்வி அமைச்சின் ஆசிரியர் முகமது கைருல் ரிதுவான் முகமது சரிப் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வயது 38.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைதுசெய்யப்பட்ட இவர் தீவிரவாத உணர்வைத் தூண்டும் பல்வேறு இணையத்தள காணொளிகள் மூலம் தீவிரவாத சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டார். குறிப்பாக பாலஸ்தீன-இஸ்ரேல் போர் குறித்த ஃபேஸ்புக் காணொளிகளை 2007ஆம் ஆண்டு முதல் இவர் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரரான கைருல், காஸா சென்று ஆயுதமேந்திப் போரிடவும் தடுப்புக்காவலில் வைக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் மனிதநேய உதவி என்ற போர்வையில் காஸா செல்லவும் திட்டமிட்டார்.
ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தில் குறிப்பாக அதன் ராணுவப் பிரிவில் இணைந்து இஸ்ரேலியத் தற்காப்புப் படையினரை எதிர்த்துப் போரிட இவர் ஆர்வம் கொண்டார்.
ஹமாஸ் இயக்கத்தினரின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து ஆயுதமேந்திப் போரிடுவது மட்டுமன்றி ஆள்கடத்தல், போர்க் கைதிகளைக் கொல்லுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கைருல் தயாராக இருந்தார்.
இதற்காக காஸா செல்வதற்கு 2012, 2014, 2021ஆம் ஆண்டுகளில் தீவிர முயற்சியில் ஈடுபட்டார் கைருல். தேசிய சேவையின்போது ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டதும் களப்பணிகளில் ஈடுபட்ட அனுபவங்களும் ஹமாஸ் இயக்கத்தில் செயல்படத் தனக்குக் கைகொடுக்கும் என்று இவர் நம்பினார்.
ஹமாஸ் போராளிகளுக்குத் தனக்குத் தெரிந்த முதலுதவிகளைச் செய்ய விரும்பினார் கைருல். மேலும் காஸாவில் இருக்கையில் தகவல்களை சமூக ஊடகங்களில் பகிரும் நோக்குடன் அதற்கு ஏதுவாக அரபி மொழியையும் கற்றுக்கொண்டார்.
இதற்காக உயிரையும் கொடுக்கத் துணிந்திருந்த கைருல் தன் குடும்பத்தாரிடமும் இத்தகைய எண்ணங்களை விதைக்க முனைந்தார். ஆனால் இவரது முயற்சி வெற்றிபெறவில்லை. தன் பிள்ளைகள் பிறந்தநாள் கொண்டாடுவதற்குக்கூட கைருல் தடை விதித்தார்.
தீவிரவாதம் தொடர்பான குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்ட முதல் அரசாங்க ஊழியர் இவர் என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.
வன்முறையை ஆதரித்தல், ஊக்குவித்தல், மேற்கொள்ளுதல் அல்லது அதற்குத் தயார்ப்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபடும் எந்தவொரு தனிநபர் மீதும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்று திட்டவட்டமாக அவர் தெரிவித்தார். நம் சக மனிதர்களில் சிலர் தீவிரவாத எண்ணங்களுடன் இருக்கக்கூடும். அதன் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் பெற்றிருத்தல் அவசியம் என்று குறிப்பிட்ட அமைச்சர், அத்தகையோரை அடையாளம்காணும் சில அறிகுறிகளையும் பட்டியலிட்டார்.
"இவர்கள் தீவிரவாதம் சார்ந்த பொருள்களை வைத்திருக்கக்கூடும். பிற இனம் அல்லது சமயத்தைச் சார்ந்தோர்மீது கடும் வெறுப்பைக் காட்டக்கூடும். குறிப்பிட்ட தீவிரவாத அல்லது போராளிக் குழுக்களுக்கு ஆதரவளிக்கக்கூடும். வெளிநாட்டு மோதல்களில் பங்கேற்பதற்காக அங்கு செல்ல ஆர்வம் காட்டக்கூடும். தீவிரவாத வன்முறைச் செயல்பாடுகளில் ஈடுபாடு இருப்பதை வெளிப்படுத்தக்கூடும்," என்றார் அமைச்சர்.
விசாரணையில் கைருல் தனித்துச் செயல்பட்டது தெரியவந்தது. இவர் வேறு யாரையும் காஸாவிற்கு அழைத்துச் செல்லவோ வன்முறைச் செயல்பாடுகளில் ஈடுபடுத்தவோ முனையவில்லை என்றது உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை.
தன் மாணவர்களை அவர் தீவிரவாதத்தில் ஊக்குவிக்கவில்லை. சிங்கப்பூரைத் தாக்கும் எண்ணமும் அவருக்கு இல்லை என்று விசாரணையில் தெரியவந்தது. சென்ற ஆண்டு அக்டோபரிலிருந்து கைருல் ஆசிரியப் பணியில் ஈடுபடவில்லை என்று கல்வி அமைச்சு கூறியது.

