2023ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் கட்டுமானத்துக்கான தேவை நிலையாக இருக்கும் என்றும் அரசாங்கத் துறைத் திட்டங்கள் அதில் பெரும்பங்கு வகிக்கவுள்ளதாகவும் கட்டட, கட்டுமான ஆணையம் கூறியுள்ளது.
தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் (பிடிஒ) வீடுகள், எம்ஆர்டி ரயில் பாதைகள், தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் போன்றவற்றை அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
சிங்கப்பூரில் இந்த ஆண்டு சுமார் $27 பில்லியன் முதல் $32 பில்லியன் வரை மதிப்பிலான கட்டுமானத் திட்டங்களுக்கான குத்தகைகள் ஒட்டுமொத்தமாக வழங்கப்படும் என்று ஆணையம் மதிப்பிட்டது.
2021ஆம் ஆண்டு, 2022ஆம் ஆண்டு இரண்டிலும் ஏறத்தாழ அதே அளவிலான குத்தகைகள் வழங்கப்பட்டன.
கட்டுமானத் தேவையில் அரசாங்கத் துறைத் திட்டங்கள் 60 விழுக்காட்டுப் பங்கை வகிக்கக்கூடும். அதாவது சுமார் $16 பில்லியனிலிருந்து $19 பில்லியன் வரையிலான கட்டுமானத் திட்டங்களுக்கான குத்தகையை அரசாங்கத் துறை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுமானத்துக்கான தேவை நிலையாய் இருப்பதாகத் தோன்றினாலும், எதிர்காலச் சவால்களை நிறுவனங்கள் கருத்தில் கொள்ளவேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெல்மண்ட் லீ கூறினார். முக்கிய பொருளியல்களில் வளர்ச்சி மந்தநிலை ஏற்படும் அபாயம் அதிகரிப்பது, விநியோக சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், பருவநிலை மாற்றம் போன்றவை அந்தச் சவால்கள்.
கட்டட, கட்டுமான ஆணையமும் ரிடாஸ் எனப்படும் சொத்துச் சந்தை மேப்பாட்டாளர்கள் சங்கமும் இணைந்து, கிராண்ட் கோப்தோர்ன் ஹோட்டலில் நடத்திய கருத்தரங்கில் அமைச்சர் நேற்று பேசினார்.
"அண்மைய ஆண்டுகளில் கற்ற பாடங்களைக் கருத்தில் கொண்டு கட்டடத் துறையின் மீள்திறனை வலுப் படுத்துவது முக்கியம். ஆள்பலத்தை அதிகம் பயன்படுத்தும் பணிகளுக்காக வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது, நிகர அளவில் கரிம வெளியேற்றத்தை முற்றிலும் அகற்றுவது உள்ளிட்டவற்றை நாம் செய்ய வேண்டும்," என்றார் திரு லீ.
2023ல் தனியார் துறைக் கட்டுமானத் திட்டங்களின் மதிப்பு சுமார் $11 பில்லியன் முதல் $13 பில்லியன் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டுத் தேவைக்கு ஒப்பானது.
புதிய கொண்டோமினியம் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளும் கடும் தேவைகளுக்கு ஏற்ப மிகவும் உயர்ந்த தரத்தில் அமையும் தொழிற்துறைக் கட்டடங்கள் போன்றவை தனியார் துறையில் இவ்வாண்டு கட்டப்படவுள்ளன.
சில முக்கிய திட்டங்கள் 2022லிருந்து 2023க்கு மாற்றப்பட்டுள்ளதாலும் சொத்து மதிப்பை உயர்த்த சில பழைய கட்டடங்கள் புதுப்பிக்கப்பட உள்ளதாலும் வணிகக் கட்டடங்களுக்கான கட்டுமானத் தேவை அதிகரிக்கவுள்ளது என்று ஆணையம் தெரிவித்தது.
கடந்த 2021ல் 17.8 பில்லியன் வெள்ளியாக இருந்த அரசாங்கத் துறை கட்டுமானத் தேவை, 2022ல் சற்று உயர்ந்து $17.9 பில்லியன் ஆனது. குறுக்கு ரயில் பாதையின் முதல் கட்டம், ஜூரோங் வட்டார ரயில் பாதை, சுகாதார அமைச்சின் சில மருத்துவ நிலையங்கள் ஆகியவற்றின் கட்டுமானத்தால் அந்த உயர்வு ஏற்பட்டது.
தனியார் துறையில் சென்ற ஆண்டு கட்டுமானத் துறைத் தேவை சற்று குறைந்தது. 2021ல் $12.1 பில்லியனாக இருந்த அத்தொகை, 2022ல் $11.9 பில்லியனாகக் குறைந்தது. சில பொருளியல் சரிவுகள் இதற்குக் காரணமாய் இருந்தன.

