சீனா கிருமித்தொற்று பற்றி போதுமான புள்ளிவிவரங்களை வெளியிடாததால் சீனப் புத்தாண்டு நேரத்தில் தொற்றுப் பரவல் அபாயத்தைச் சமாளிப்பதில் சீனாவுக்கு உதவுவது சவாலாய் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அத்துடன், சீனா அதன் தொற்று எண்ணிக்கையை முழுமையாக வெளியிடாததால் உலக அளவில் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் நிறுவனம் கூறியது.
உண்மையான நிலவரத்தை சீனா மூடி மறைக்கிறது என்ற அச்சத்தை அதிகரிக்கும் வகையில் சீனா அதன் அன்றாடத் தொற்று எண்ணிக்கையை கடந்த மூன்று நாள்களாக வெளியிடுவதை நிறுத்தியுள்ளது.
வேலையின் பொருட்டு வேறு நகரங்களில் வசிக்கும் பல மில்லியன் சீனர்கள் சீனப் புத்தாண்டின்போது புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொவிட்-19 கிருமித் தொற்று பன்மடங்கு பெருகும் என்று அஞ்சப்படுகிறது.
புத்தாண்டுப் பயணங்களால் ஏற்படும் தொற்று அபாயத்தைச் சமாளிப்பதிலும் சீனாவுடன் ஒத்துழைப்பதில் சவால்கள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது.
தொற்று அதிகரிப்பின் அபாயத்தை முழுமையாக மதிப்பிட சீனா போதிய தகவல்களைத் தரவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை, மருத்துவ உதவித் துறை இயக்குநர் ரஹ்மான் மஹமுட் நேற்று கூறினார்.
சீனாவில் புதுவகை கிருமிகள் பரவுகின்றனவா, நகரங்களில் தொற்றுச் சம்பவங்கள் கூடுகின்றனவா, குறைகின்றனவா என்பதுபோன்ற தகவல்களை வழங்கும்படி அவர் சீனாவைக் கேட்டுக்கொண்டார்
உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ், கொவிட்-19 தொற்றால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை சீனா குறைத்துக் கூறுவதாக நேற்று தெரிவித்தார். கடந்த டிசம்பரிலிருந்து இதுவரை கிருமித் தொற்றால் 40 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சீனா முன்னர் கூறியது. ஆனால் நகரங்களின் சவக் கிடங்குகள், தகனச் சாலைகளில் உள்ள நெரிசல் நிலைமை வேறுவிதமாக இருப்பதைக் காட்டுகின்றன.
சீனாவின் அன்றாடத் தொற்று நிலவரம் கடைசியாக திங்கட்கிழமை அன்று வெளியிடப்பட்டது. தொற்று நிலவரத்தை வெளியிடுவதை விரைவில் நிறுத்தப் போவதாக சீனா கடந்த மாதம் கூறியிருந்தது.
சீனப் புத்தாண்டு நேரத்தில் ஊர் திரும்பி தங்கள் குடும்பத்தில் உள்ள முதியவர்களைச் சந்திக்க வேண்டாம் என்றும் சீனர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு வருகின்றனர். முக்கிய மருத்துவ நிபுணர்கள் அந்த எச்சரிக்கையை விடுப்பதாக தி குளோபல் டைம்ஸ் போன்ற சீனாவின் முக்கிய செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.
சீன நாட்டவர் அதிகம் பயன் படுத்தும் வெய்போ சமூக ஊடகத்திலும் ஊர் திரும்ப வேண்டாம் என்ற அறிவுறுத்தல்கள் பரவி வருகின்றன.
சீனா, கடந்த 8ஆம் தேதி அதன் எல்லைகளைத் திறந்துவிட்டு வெளிநாட்டுப் பயணங்களுக்கு வழிவிட்டது.
தொற்றுப் பரவலுக்கும் புது வகைக் கிருமிகளுக்கும் பல நாடுகளும் அஞ்சி சீனப் பயணி களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் சினம் அடைந்த சீனா, தென் கொரியா, ஜப்பான் குடிமக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது.

