தரையிறங்குவதற்கு முன்னர் பள்ளத்தாக்கு அருகே விழுந்து எரிந்தது
நேப்பாளத்தில் நேற்று நிகழ்ந்த விமான விபத்தில் இரவில் கிடைத்த கடைசி நிலவரப்படி 68 பேர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
'யெட்டி ஏர்லைன்ஸ்' என்னும் உள்ளூர் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான அந்தப் பயணிகள் விமானம் 72 பேருடன் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இவர்களில் 68 பேர் பயணிகள்; நால்வர் விமான ஊழியர்கள்.
பொக்காரா விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு முன்னர் அந்த விமானம் அப் பகுதியின் ஆற்றுப் பள்ளத்தாக்கு அருகே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்த
தாகக் கூறப்பட்டது. ஓடுதளத் திலிருந்து விலகி விமானம் விபத்தில் சிக்கியதாக ஒரு தக வலும் வெளியானது.
வானிலை தெளிவாக இருந்த நிலையிலும் விமானம் விபத்தில் சிக்கியதாக நேப்பாள விமானப் போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் ஜெகநாத் நிரோலா கூறினார்.
"30 உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. பெரும் பள்ளத்தினுள் மீட்க முடியாத அளவுக்கு 14 உடல்கள் விழுந்துள்ளன. பாரந்தூக்கிகள் வரவழைக்கப்பட்டு மீட்பு முயற்சிகள் தொடங்கப்பட்டு உள்ளன," என்று நேற்று பிற்பகலில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விமானம் சுக்குநூறாக நொறுங்கிவிட்டது என்று ராணுவப் பேச்சாளர் கிருஷ்ண பண்டாரி கூறியிருந்தார். நொறுங்கிய விமானத்தின் பாகங்களை மீட்புப் பணியாளர்கள் சேகரிப்பதை உள்ளூர் தொலைக்காட்சிகள் காட்டின. சம்பவ இடத்தில் எரிந்த பொருள்களும் தீப்பிழம்புகளும் காணப்பட்டன. விமானத்தின் பாதி மட்டுமே மலைப்பகுதியில் கிடந்ததாக உள்ளூர்வாசி ஒருவர் கூறினார்.
அந்த மலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். விமானம் இன்னும் எரிந்துகொண்டு இருப்பதாக காவல்துறை பேச்சாளர் அஜய் கேசி முன்னதாக தொலைக்காட்சிசெய்தியில் கூறியிருந்தார்.
காலை 10.50 மணியளவில் ஆற்றின் அருகே பறந்தபோது விமான நிலையத்துடன் விமானம் தொடர்புகொண்டதாகவும் அதன் பின்னர் அது விபத்தில் சிக்கியதாகவும் விமானப் போக்கு வரத்து ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
இதற்கிடையே, விமானப் பயணிகளில் இரு குழந்தைகள் இருந்ததாகவும் பத்துப் பேர் வெளிநாட்டினர் என்றும் அவர்களில் ஐவர் இந்தியர் என்றும் விமான நிறுவன பேச்சாளர் சுதர்ஷன் பார்த்தாவ்லா கூறினார்.
1992ஆம் ஆண்டுக்குப் பின்னர் நேப்பாளத்தில் நிகழ்ந்திருக்கும் ஆக மோசமான விமான விபத்து இது என்று விமானப் போக்குவரத்து பாதுகாப்புக் கட்டமைப்பின் தரவுகள் தெரிவித்தன. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய ஐவர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நேப்பாள அரசு இன்று ஒரு நாள் துக்கம் அறிவித்துள்ளது.

