உலகின் இரண்டாவது பெரிய பொருளியல் நாடாகக் கருதப்படும் சீனா கடந்த ஆண்டு 40 ஆண்டுகள் காணாத சரிவைச் சந்தித்துள்ளதாக பொருளியல் நிபுணர்கள் கணித்து உள்ளனர்.
கொவிட்-19 கொள்ளைநோய், சொத்துப் பிரச்சினைகள் ஆகிய இரண்டும் சீனாவின் பொருளியல் வளர்ச்சியைச் சிதைத்துவிட்டதாக பத்து பகுப்பாய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆண்டுக்காண்டு அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (பொருளியல்) 2022ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததைவிடக் குறைவாக 2.7 விழுக்காடு மட்டுமே இருக்கும் என்று அவர்கள் முன்னுரைத்து உள்ளனர்.
அதற்கு முந்திய ஆண்டான 2021ல் 8 விழுக்காட்டைத் தொட்ட வளர்ச்சி ஒரே ஆண்டில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ள தாகக் கூறுகின்றனர் அவர்கள்.
சீனாவின் பொருளியல் இதற்கு முன்னர் 1976ஆம் ஆண்டு 1.6 விழுக்காடு என்னும் ஆகக் குறைவான வளர்ச்சியைச் சந்தித்தது.
அப்போதைய அதிபர் மா சே துங் மரணமடைந்ததைத் தொடர்ந்து இந்த வீழ்ச்சி ஏற்பட்டது.
அதற்குப் பின்னர் கடந்த ஆண்டுதான் அப்படியொரு அதலபாதாள வீழ்ச்சியை சீனா சந்தித்ததாக பத்து பகுப்பாய்வாளர்களும் ஒன்றாகக் கணித்துள்ளனர்.
இந்தக் கணக்கில் கொவிட்-19 கொள்ளைநோய் மிகுந்திருந்த 2020ஆம் ஆண்டு சேர்க்கப்படவில்லை.
பெய்ஜிங் 2022ஆம் ஆண்டுக்கான பொருளியல் வளர்ச்சி 5.5 விழுக்காட்டைத் தொடவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருந்தது. இருப்பினும் பகுப்பாய்வாளர்கள் முன்னுரைத்து உள்ள வளர்ச்சி கிட்டத்தட்ட இதில் பாதியளவுதான்.
கொவிட்-19 கொள்ளைநோய் அறவே இருக்கக்கூடாது என்னும் சீனாவின் அணுகுமுறை வளர்ச்சியைப் பெரிதும் பாதித்ததாகக் கருதப்படுகிறது. முக்கியமாக, உற்பத்தி செயல்பாடுகளும் பொதுமக்களின் பயனீடும் இந்த அணுகுமுறையால் முடங்கிப் போயின.
கடுமையான முடக்கநிலை, தனிமை உத்தரவு, கட்டாயப் பரிசோதனை போன்றவை உற்பத்தித் தொழிற்சாலைகள் பல மூடப்படுவதற்கும் ஸெங்ஸோ போன்ற பெரும் வர்த்தக மையங்கள் முடங்குவதற்கும் காரணங்
களாக அமைந்தன.
உலகின் ஆகப்பெரிய ஐஃபோன் கைபேசித் தயாரிப்புத் தொழிற்சாலை ஸெங்ஸோ நகரில்தான் உள்ளது.

