மலேசியாவின் பாஹாங் மாநில சுல்தானிடமிருந்து மதிப்பிற்குரிய பதக்கம் பெற்றவர்களின் பட்டியலில் 29 பேர் போலியாக இடம் பெற்றுள்ளனர்.
இந்த அதிர்ச்சி தரும் தகவலை பாஹாங் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
பொது எச்சரிக்கையாக 29 பெயர்களை வெளியிட்டுள்ள அந்த அரசாங்கம் இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளது.
பாஹாங் சுல்தானிடமிருந்து பெறப்படும் 'டத்தோ', 'டத்தோஸ்ரீ' பட்டம் பெற்றவர்களின் பட்டியலை சிலர் திருத்தி மோசடி செய்துள்ளனர். இதையடுத்து பாஹாங் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் போலியாக இடம்பெற்றவர்களின் பெயர்களை அம்மாநில அரசாங்க தலைமைச் செயலாளர் டாக்டர் சாலேஹுயுடின் இஷாக் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி இணையத்தளத்தில் இடம்பெற்ற கௌரவ பதக்கப்பட்டியலை அனுமதியின்றி மாற்றியதாக அரசாங்க தலைமைச் செயலகத்தின் இரண்டு முன்னாள் அரசாங்க ஊழியர்கள் மீது 29 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
முஹமட் இஸா முஹமட் யூசோஃப், 36, என்பவர் 29 தனிப்பட்டவர்களையும் வெளிநாட்டைச் சேர்ந்த பெயர்களையும் மோசடியாக பட்டியலில் சேர்த்த 26 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அதே இணையத் தளத்தில் மூவரின் பெயர்களை சேர்த்ததற்காக முஹமட் அமர் சியாஃபிக் அஸிஸ், 30, மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
1997ஆம் ஆண்டின் கணினி குற்றவியல் சட்டப்பிரிவு 5ன் கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 100,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஏழு ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆனால் டத்தோ, டத்தோஸ்ரீ பட்டம் விற்கப்பட்ட விவகாரத்தில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று இருவரும் கூறியுள்ளனர்.

