மனிதவள அமைச்சு அறிமுகப்படுத்திய உயர் பாதுகாப்பு காலக்கட்டத்தில் மரணங்கள் குறைந்தன. இருந்தாலும் காயங்களை ஏற்படுத்திய பெரிய சம்பவங்களைத் தடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் தொடர்ந்து நீடிக்கும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர் பாதுகாப்பு திட்டத்தை மனிதவள அமைச்சு அறிமுகப்படுத்தியது.
2022 ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் வரையில் மாதத்திற்கு சராசரியாக 49.1 காயம் ஏற்படுத்திய சம்பவங்கள் நடந்துள்ளன. இது, செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் 55.3ஆக இருந்தது என்று அமைச்சு நேற்று வெளியிட்ட தகவலில் தெரிவித்தது.
அதே சமயத்தில் அண்மைய மாதங் களாக வேலையிடங்களில் நிகழும் மரணங்கள் குறைந்துள்ளன. இதன் காரணமாக உயர்பாதுகாப்பு காலக்கட்டத்தை பிப்ரவரிக்குப் பிறகும் நீட்டிப்பது குறித்து அமைச்சு ஆராய்ந்து வருவதாக மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்துள்ளார்.
கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்துவதற்கு முன்பு 100,000 ஊழியர்களுக்கு 1.6 என்ற விகிதத்தில் வேலையிட மரணங்கள் நிகழ்ந்தன.
இந்தக் காலகட்டத்தில் கடுமையானப் பாதுகாப்பு அம்சங்களை மீறி உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கு மூன்று மாதங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் 100,000 ஊழியர்களுக்கு மரண விகிதம் 0.9க்கு குறைந்தது. இது, 2022 முழுவதும் 100,000 ஊழியர்களுக்கு 1.3ஆக இருந்தது.
இதே ஆண்டில் 46 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கு முன்பு கடைசியாக 2016ஆம் ஆண்டில் ஆக அதிகமாக 66 மரணங்கள் பதிவாகியிருந்தன.
இதற்கிடையே நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஸாக்கி, வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத்துக்கான அனைத்துலக ஆலோசனைக் குழு வழங்கிய பரிந்துரைகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.
"உயர் பாதுகாப்பு காலகட்டம் சிந்திக்க நேரம் கொடுத்தது. நாம் என்ன வித்தியாச மாக செய்ய முடியும் என்பதைப் பற்றி ஆராய முடிந்தது," என்று திரு ஸாக்கி முகம்மது மேலும் தெரிவித்தார்.

