இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழ் மக்களிடம் இணக்கமான சூழ்நிலையை உருவாக்க இலங்கை அரசமைப்புச் சட்டத் தின் 13வது திருத்தத்தை அந்நாடு முழுமையாக அமல்படுத்துவது முக்கியம் என்று இந்தியா கருதுகிறது. இதனை கொழும்பு சென்றிருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வுக்கு வகை செய்யும் இந்த சட்டத்திருத்ததை அமல்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ஆகியோரைச் சந்தித்த பின்னர் திரு ஜெய்சங்கள் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
இலங்கையில் அரசியல், பொருளியல் நிலைத்தன்மை ஏற்படவேண்டும் என்பதை இந்தியா எப்போதும் ஆதரித்து வருவதாக அவர் அதில் குறிப்பிட்டார்.
"இந்த நிலைத்தன்மைக்கு 13வது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதும் மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதும் அவசியம் என்ற இந்தியாவின் கருத்தை அதிபர் விக்ரமசிங்கவுடன் பகிர்ந்துகொண்டேன். இந்திய வம்சாவளி தமிழ்ச் சமூகத்தின் தேவைகளில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவருடன் விவாதித்தேன்," என திரு ஜெய்சங்கர் அறிக்கையில் கூறியுள்ளார்.

