அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள மாண்டெரே பார்க் எனுமிடத்தில் உள்ளூர் நேரப்படி சென்ற சனிக்கிழமை இரவு பத்து மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் 72 வயது ஆடவர், கிட்டத்தட்ட 12 மணி நேரம் கழித்துக் காவல்துறையினர் அணுகியபோது தன்னைத் தானே சுட்டுக்கொண்டு மாண்டதாகக் கூறப்படுகிறது.
நடனக்கூடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பத்துப் பேர் உயிரிழந்தனர். மேலும் பத்துப் பேர் காயமடைந்தனர்.
அந்தச் சம்பவம் நடந்து ஏறக்குறைய 20 நிமிடங்கள் கழித்து, அருகில் உள்ள அல்ஹாம்பரா எனும் நகரிலும் அந்த ஆடவர் துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றார். ஆனால் அங்கு நின்றிருந்த இருவர், ஆடவர் சுடுவதற்கு முன்பாக அவரது துப்பாக்கியைத் தட்டிவிட்டதால் ஆடவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
சந்தேக நபர் ஹூ கன் டிரான் என்று அடையாளம் காணப்பட்டதாக லாஸ் ஏஞ்சலிஸ் மாநில காவல்துறைத் தலைவர் ராபர்ட் லூனா தெரிவித்தார்.
தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் பெயர்களைக் காவல்துறை வெளியிடவில்லை.
இருப்பினும் அவர்களில் ஐவர் ஆடவர், ஐவர் பெண்கள் என்றும் அனைவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் அதிகாரிகள் கூறினர்.
டிரான் பயன்படுத்திய துப்பாக்கி கலிஃபோர்னியாவில் தடைசெய்யப்பட்ட ஒன்று என்றார் திரு லூனா.
மாண்டெரே பார்க் துப்பாக்கிச்சூட்டிற்கு மறுநாள் அங்கிருந்து ஏறக்குறைய 34 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளை வேனை ஓட்டிச்சென்ற டிரானைக் காவல்துறையினர் நெருங்கினர். அப்போது ஆடவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாகக் கூறப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களில் ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் அவர்களில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்தது.
ஏறத்தாழ 60,000 பேர் வசிக்கும் மாண்டெரே பார்க் நகரம் பொதுவாகவே அமைதியான, அழகான நகரம் என்று லாஸ் ஏஞ்சலிஸ் சீன வர்த்தக சபை கூறியது.
அந்த நகரின் குடியிருப்பாளர்களில் ஏறத்தாழ 65 விழுக்காட்டினர் ஆசியர்கள் என்றும் சீனாவில் இருந்து குடியேறும் பலரும் விரும்பி அந்நகரைத் தங்கள் வசிப்பிடமாகத் தேர்ந்தெடுப்பதாகவும் கூறப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு நடந்த 'ஸ்டார் பால்ரூம் டான்ஸ் ஸ்டுடியோ' நடனக்கூடத்தில் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.
பெரும்பாலும் அந்த நடனக்கூடத்திற்கு நடுத்தர வயதினரும் மூத்தோரும் அதிகம் செல்வர் என்று கூறப்பட்டது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது துணைவியாரும் மாண்டெரே பார்க் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர், காயமடைந்தோர் ஆகியோருக்காக பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்டோருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம், இம்மாதம் 26ஆம் தேதி மாலை வரை அமெரிக்க அரசாங்கக் கட்டடங்கள் அனைத்திலும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடும்படி அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

