கொவிட்-19 கிருமிப் பரவலை முன்னிட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முடக்கப்பட்ட சீனாவின் வூஹான் நகர மக்கள், எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கிருமித்தொற்று குறித்து இனியும் பயமில்லை என்றும் கூறியுள்ளனர்.
ஜனவரி 2020ல் சீனா அந்த நகரை முடக்கியபோதும் உலகெங்கும் மில்லியன்கணக்கானோர் உயிரிழக்கக் காரணமானதுடன் உலகப் பொருளியலையும் புரட்டிப் போட்டது கிருமிப்பரவல்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக உலக நாடுகள் கடுமையான முடக்கங்களை அறிவித்ததுடன் பெரிய அளவிலான கிருமித்தொற்றுப் பரிசோதனைகளும் கட்டாயமாக்கப்பட்டன.
கிருமிப் பரவல் அறவே இல்லாத நிலை எனும் கொள்கையைச் சீனா சென்ற மாதம் கைவிட்டது.
சீனர்கள் இந்த வாரம் சீனப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் வேளையில், 2020 தொடக்கத்தில் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்ததுபோல இப்போது வூஹான் முக்கியத்துவம் பெறவில்லை.
உள்ளூர்வாசிகள் குளிரைப் பொருட்படுத்தாமல் சந்தைகளில் குவிவதையும் குடும்பமாக யாங்ட்ஸி ஆற்றைக் காணச் செல்வதையும் பார்க்க முடிகிறது. சிலர் முகக்கவசம் அணியவில்லை.
வாழ்க்கை வழக்க நிலைக்குத் திரும்புவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர் பலர். தங்கள் மனவுளைச்சல், கவலைகள் ஆகியவற்றுக்குத் தீர்வு கிடைத்திருப்பதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் அவர்கள் கூறினர்.
ஜனவரி 2020ல் ஒரு நள்ளிரவில் அறிவிக்கப்பட்ட முடக்க நிலை வூஹானில் 76 நாள்கள் நீடித்தது. கிருமித்தொற்று பரவலுக்குக் காரணமாகக் கருதப்பட்ட கடலுணவுச் சந்தை இன்னும் திறக்கப்படவில்லை.
கிருமிப் பரவல் தொடங்கியதில் இருந்து அண்மைய வாரங்களில்தான் சீனாவில் நோய்த்தொற்று மோசமாகப் பரவியது. சென்ற மாதம் நாட்டில் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டதையடுத்து கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினருக்கு கொவிட்-19 கிருமி தொற்றியதாகக் கூறப்படுகிறது.
ஒரு வாரத்தில் 13,000 பேர் கிருமித்தொற்றால் உயிரிழந்ததாக சீனா தெரிவித்தது. ஆனால் அது நோய்ப் பரவல் குறித்த உண்மையான தகவல்களை வெளியிடவில்லை என்று உலக நாடுகள் குறைகூறுகின்றன.

