வடக்கு சிங்கப்பூரிலிருந்து நகரம் வரையிலான $7.47 பில்லியன் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடத் திட்டம் பாதியை எட்டியுள்ளது.
அட்மிரல்டி ரோடு வெஸ்ட்டில் தொடங்கி, ரிபப்ளிக் பொலிவார்ட் அருகிலுள்ள ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் முடிவடையும் 21.5 கிலோமீட்டர் நீள வடக்கு-தெற்கு பாதையின் கட்டுமானம் 2018ல் தொடங்கியது. திட்டமிட்டபடி 2027ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கில் 8.8 கி.மீ. மேம்பாலச் சாலை தெற்கில் 12.3 கி.மீ. சுரங்கச் சாலை, பேருந்து பாதைகள், சைக்கிள் பாதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த வடக்கு-தெற்கு பாதை, உட்லண்ட்ஸ், செம்பவாங், ஈசூன், அங் மோ கியோ ஆகிய பகுதிகளிலிருந்து நகரத்துக்குச் செல்லும் பயண நேரத்தை 30 நிமிடங்கள் குறைக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சுரங்கப் பாதைகளின் கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக, சுரங்கப்பாதை சுவர்களை நிறுவுதல், மின்சாரம், தொலைத்தொடர்பு இணைப்புகளையும் போக்குவரத்தையும் தடம் மாற்றுவது போன்ற பணிகள் நடைபெற்று வருவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியது.
முன்னைய அறிக்கைகளின்படி, வடக்கு-தெற்கு பாதையின் சுரங்கப்பாதை 2026ல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுரங்கப்பாதைக்கு மேலே உள்ள சாலைகள் மற்றும் பிற பாதைகளின் மறுசீரமைப்பு 2027ல் செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது, சுரங்கம் கட்டி அதன் மேற்பகுதியை பழையபடி ஆக்கும் சிங்கப்பூரின் மிகப்பெரிய சுரங்கப்பாதைத் திட்டமாகும். தரைக்கு மேலும் கீழும் கட்டுமானங்களைக் கொண்ட பகுதிகளின் ஊடாக அமைக்கப்படுவது இதன் கட்டுமானச் சிக்கலை அதிகரிக்கிறது என்றது ஆணையம்.
ஆழமான அகழியைத் தோண்டி, சுரங்கப்பாதையை உருவாக்கி, அதன் மேற்பரப்பை அதன் முன்னைய நிலையில் மறுநிர்மாணம் செய்யும் பாரம்பரிய சுரங்கப்பாதை முறையில் இது கட்டப்படுகிறது. 9 கி.மீ காலாங்-பாய லேபார் விரைவு சுரங்கப் பாதையும் இந்த முறையில் கட்டப்பட்டது.
தாம்சன் சாலைப் பகுதியில் அருகருகே கட்ட இடமில்லாததால், சுரங்கப் பாதைகள் ஒன்றன் மேல் ஒன்றாகக் கட்டப்படவுள்ளன. தெற்கு நோக்கிச் செல்லும் பாதை மேலேயும் வடக்கு நோக்கிச் செல்லும் பாதை கீழேயும் இருக்கும்.
மற்ற நாடுகளில் வெற்றிகரமாக பயன்படுத்தப்படும் மேம்பட்ட கட்டுமான முறைகள் முதல் முறையாக சிங்கப்பூரில் செயல்படுத்தப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் பணிகள் 2024ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பாதை நகரத்திற்கான பயண நேரத்தை குறைக்கும் என்றபோதும் கட்டுமானப் பகுதியின் அருகிலுள்ள குடியிருப்பாளர்களும் வணிகங்களும் கட்டுமான இரைச்சல், அதிர்வுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்களை இன்னும் நான்கு ஆண்டுகள் சமாளிக்க வேண்டும் என்று கவலை தெரிவித்துள்ளன.
இவ்வாண்டு அடித்தளப் பணிகள் முடிந்து அகழ்வுப் பணிகள் தொடங்கியதும் இரைச்சல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றது ஆணையம்.
"சத்தத்தைக் குறைக்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்," என்று இத்திட்டத்திற்கான ஆணையத்தின் துணை இயக்குநர் திரு ஆங் மௌ கூன் கூறினார்.
கட்டி முடிக்கப்பட்டால், சிங்கப்பூரின் வடக்குப் பகுதியை நேரடியாக நகரத்துடன் இணைக்கும் வகையில் 16 நுழைவாயில்களும் 17 வெளியேறும் வழிகளும் இப்பாதையில் இருக்கும்.

