மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.
நேற்றுப் பிற்பகல் நிலவரப்படி, ஏறக்குறைய 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். நேற்று முன்தினத்தைவிட இது இருமடங்குக்குமேல்.
கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்ததால், நேற்று முன்தினம் இரவு எட்டு மணிக்கு 469 குடும்பங்களைச் சேர்ந்த 1,703 பேர் வெளியேற்றப்பட்டனர்.
மூவார் உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதாக மா நிலப் பேரிடர் நிர்வாகக் குழு தெரிவித்தது.
செகாமட்டில் ஆக அதிகமாக 1,417 பேர் பாதிக்கப்பட்டனர். குளுவாங்கில் 1.191 பேரும் மெர்சிங்கில் 640 பேரும் கோத்தா திங்கியில் 568 பேரும் பத்து பகாட்டில் 151 பேரும் வெள்ளத்தை முன்னிட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக அக்குழு நேற்றுத் தெரிவித்தது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு 16 நிவாரண நிலையங்கள் திறக்கப்பட்டன. நேற்றுப் பிற்பகலில் 41 நிவாரண நிலையங்கள் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜோகூர் மாநிலத்தின் மூன்று ஆறுகளில் நீர்மட்டம் அபாயகரமான அளவை எட்டியுள்ளது. மேலும் ஆறு நதிகளின் நீர்மட்டம் எச்சரிக்கை விடுக்குமளவு உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டது.
ஜாலான் சுங்கை திராம்-உலு தெப்ராவ் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து அங்கு சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது.
லாபிஸ் நகரில் கடுமையான மழை பெய்த வேளையில் கார் ஒன்று ஏரியில் விழுந்தது. அதில் பயணம் செய்த மூவரும் 13 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும், செகாமட் நோக்கிச் செல்லும்போது ஓட்டுநர் காரின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் தீயணைப்பு, மீட்புத் துறை கூறியது.
சம்பவத்தில் லேசாகக் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
ஜோகூரில் மழை தொடரும் என்று மலேசிய வானிலை ஆய்வகம் முன்னுரைத்திருக்கிறது. மலேசியாவில் மேலும் சில மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
வானிலை குறித்த அண்மைய தகவல்களுக்கு மலேசிய வானிலை ஆய்வகத்தின் இணையத் தளம், சமூக ஊடகப் பக்கங்கள் ஆகியவற்றை நாடும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக மலேசிய தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.

