சீனப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் சிங்கப்பூரில் கொவிட்-19 நோய்த் தொற்று குறித்து அமைச்சர் ஓங்
சிங்கப்பூரின் கொவிட்-19 சூழல் நிலைப்பட்டு வருவதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார். சீனப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் அன்றாட பாதிப்பு எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருந்தது என்றார் அவர்.
சீனப் புத்தாண்டை ஒட்டிய வாரயிறுதியின்போது கிட்டத்தட்ட 100ஐ ஒட்டியிருந்த இவ்வெண்ணிக்கை, கடந்த திங்கட்கிழமை 78ஆகக் குறைந்ததை திரு ஓங் சுட்டினார்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் தினசரி எண்ணிக்கை வெகுநாள் கழித்து இவ்வாறு இரட்டை இலக்கமாகப் பதிவாகியுள்ளதைச் சுட்டிய அமைச்சர், பொது விடுமுறைக் காலமும் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றார்.
கிருமிப் பரவல் தொடர்பான கட்டுப்பாடுகள் சென்ற ஆண்டு தளர்த்தப்பட்ட பிறகு முதல்முறையாகச் சென்ற வாரம் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
சீனப் புத்தாண்டை ஒட்டிய நீண்ட வாரயிறுதியின்போது கொவிட்-19 பரவல் அதிகரிக்கவில்லை என்றும் நேற்று முன்தின நிலவரப்படி, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 500ஆகப் பதிவானது என்றும் திரு ஓங் சொன்னார்.
மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் திறம்படச் சமாளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அன்றாட கொவிட்-19 பாதிப்பு குறித்து இதுபோல் இனியும் அலசி ஆராய வேண்டியதில்லை என்பது தமக்குத் தெரியும் என்றாலும், சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்ததாகவும் நிலைமை இப்போது நிலைப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் அமைச்சர் ஓங் சொன்னார்.
ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 52ல் நேற்று நடைபெற்ற என்டியுசி ஹெல்த் ஜூரோங் ஸ்பிரிங் தாதிமை இல்லத்தின் அதிகாரபூர்வத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
மூப்படையும் மக்கள்தொகைதான் இந்தத் தலைமுறை எதிர்கொள்ளும் ஆகப் பெரிய சமூக விவகாரமாக இருக்கும் என்றார் அவர்.
கிருமிப்பரவலால் சிங்கப்பூரில் பல தாதிமை இல்லங்களின் திறப்பு தள்ளிபோடப்பட்டது. இதனால் நீண்டகாலப் பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகளை மறுவாழ்வுப் பராமரிப்புக்காகத் தாதிமை இல்லங்களுக்கு அனுப்ப இயலாமல் மருத்துவமனைகள் திணறின என்றார் அவர்.
அண்மையில் சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்துவிட்டதால், அங்கு உயர்ந்துவரும் கொரோனா பாதிப்பு சிங்கப்பூரிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பலரும் கவலைப்பட்டதாக திரு ஓங் குறிப்பிட்டார். இப்போது வாரத்திற்கு 38 எனக் குறைந்த அளவு விமானங்களே சிங்கப்பூருக்கும் சீனாவிற்கும் இடையே இயக்கப்படுவதால், அங்கிருந்து வருபவர்கள் மூலம் பதிவாகும் கொவிட்-19 பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளது என்றார் அவர். கடந்த வாரம் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வந்தோரில் யாரும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார். சிங்கப்பூரில் கிருமிப் பரவல் நிலைப்பட்டிருப்பதால் விரைவில் மேலதிக வழக்கநிலைக்குத் திரும்புவது பற்றி அதிகாரிகள் ஆலோசிப்பதாக அமைச்சர் ஓங் கூறினார்.

