ஏர் இந்தியா நிறுவனம் பல பில்லியன் டாலர் மதிப்பில் கிட்டத்தட்ட 495 ஜெட் விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.
இதில் பாதி எண்ணிக்கையிலான விமானங்களை வாங்குவது தொடர்பில் 'போயிங்' நிறுவனத்துடனும் விமான இயந்திரங்களை விநியோகிக்கும் 'ஜெனரல் எலெக்டிரிக்', 'சிஎஃப்எம் இண்டர்நேஷனல்' ஆகிய நிறுவனங்களுடனும் நேற்று அது ஒப்பந்தம் செய்துகொண்டது.
இந்திய அரசிடமிருந்து சென்ற ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய டாடா குழுமம், நிறுவனத்திற்குப் புதுமெருகூட்டி போட்டித்தன்மையுடன் செயல்பட விழைகிறது.
நிறுவனம் கைமாறிய முதலாம் ஆண்டு நிறைவில் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
மாதக்கணக்கில் நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, குறுகலான 190 போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள், 20 போயிங் 787 ரக விமானங்கள், 10 போயிங் 777எக்ஸ் ரக விமானங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கான உடன்படிக்கை இது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
அடுத்த சில நாள்களில், ஒரு நடைபாதை மட்டுமே கொண்ட ஏறக்குறைய 235 ஏர்பஸ் விமானங்களும் அகலமான 40 ஏர்பஸ் ஏ350 ரக விமானங்களும் வாங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் எனத் தெரியவில்லை. 'ஏரோ இந்தியா' விமானக் கண்காட்சி அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது.
இத்தகைய அறிவிப்புகள் இந்தக் கண்காட்சியில் வெளியாவது வழக்கம்.
ஏர் இந்தியா நிறுவனம் இதுகுறித்த கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. விமானத் தயாரிப்பு நிறுவனங்களான போயிங், ஏர்பஸ் போன்றவையும் கருத்துரைக்க மறுத்துவிட்டன.
ஏர் இந்தியா கிட்டத்தட்ட 500 புதிய விமானங்களை வாங்கக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் சென்ற மாதம் தகவல் வெளியிட்டிருந்தது. இந்தியாவில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை சென்ற ஆன்டு 47 விழுக்காடு அதிகரித்தது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உள்நாட்டு விமானச் சந்தையில் 30 விழுக்காட்டை வசப்படுத்துவது ஏர் இந்தியாவின் இலக்கு.
உள்நாட்டுச் சேவை, அனைத்துலகச் சேவை இரண்டிலும் ஏர் இந்தியா நிறுவனம் கடும் போட்டியை சந்திக்கக்கூடும்.

