மலேசியாவின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், அம்னோ கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அம்னோவின் முன்னாள் உதவித் தலைவரும் மலேசியாவின் முன்னாள் தற்காப்பு அமைச்சருமான ஹிஷாமுதீன் உசேன்,
கட்சியிலிருந்து ஆறு ஆண்டு
களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அம்னோ தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது கட்சியின் தலைமை இந்த முடிவை எடுத்தது.
மலேசியாவை ஆளும் கூட்டணியில் அம்னோ அங்கம் வகிக்கிறது.
கட்சியின் நிலைப்பாட்டுக்கு திரு கைரி மதிப்பளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. திரு கைரி, முன்னாள் மலேசியப் பிரதமர் அப்துல்லா படாவியின் மரு
மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடந்து முடிந்த மலேசியப் பொதுத் தேர்தலில் அவர் சிலாங்கூரின் சுங்கை புலோ தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். கட்சித் தலைமைக்கும் திரு கைரிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருந்ததாகவும் கூறப்
படுகிறது. மலேசியாவின் பிரதமராகப் பதவி வகிப்பது தமது இலக்கு என்று தேர்தலுக்கு முன்பு திரு கைரி தெரிவித்திருந்தார். இது அம்னோ கட்சித் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடிக்கு அவர் விடுத்த சவாலாகக்
கருதப்பட்டது.
"நான் மிகவும் நேசிக்கும்
கட்சியிலிருந்து நீக்கபட்டுள்ளேன். அம்னோவுக்கு விசுவாசமாக இருந்தேன்," என்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு டுவிட்டரில் பதிவிட்டார் திரு கைரி. இதற்கிடையே, தேர்தலுக்குப் பிறகு தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டதை அடுத்து, பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் முகைதீன் யாசின் பிரதமராக வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறி, ஆதரவு திரட்டியகாரணத்தினால் செம்புரோங் நாடாளுமன்ற வேட்பாளரும் அம்னோவின் முக்கிய அரசியல்
வாதிகளில் ஒருவராக இருந்த
வருமான ஹிஷாமுதீன் இடை
நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
1946ஆம் ஆண்டில் அம்னோ கட்சியை நிறுவிய ஓன் ஜஃபார் இவருடைய தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவின் மூன்றாவது பிரதமரான உசேன் ஓன் இவரது தந்தை.
திரு ஹிஷாமுதீனுடன் வேறு சில முக்கிய உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அம்னோ நீக்கிய, இடைநீக்கம் செய்த அரசியல்வாதிகளுக்குத் தனது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தெரிவித்துள்ளது. அவர்கள் அனை
வரும் பெர்சத்து கட்சியில் இணைய விண்ணப்பம் செய்யலாம் என்று அக்கட்சியின் தலைவர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார். அதேபோல, தங்களுடன் இணைந்துகொள்ளும்படி பாஸ் கட்சியும் கெராக்கான் கட்சியும் திரு கைரிக்கு அழைப்பு விடுத்துள்ளன.

