தோ பாயோவில் மேலும் புதிய அடுக்குமாடி வீடுகள் அமைய உள்ளன. தோ பாயோ ரைஸ்- பிரேடல் ரைஸ் சந்திப்பில் உள்ள காலி இடம் வீடமைப்புக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டத்தில் ஜனவரி 20ஆம் தேதி வெளியிடப்பட்ட பரிந்துரை செய்யப்பட்ட திருத்தத்தில், கேல்டிகாட் எம்ஆர்டி நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள பகுதி கல்வி பயன்பாட்டிலிருந்து குடியிருப்பு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டு உள்ளது.
முன்பு இங்கு ஃபர்ஸ்ட் தோ பாயோ தொடக்கப்பள்ளி இருந்தது. 1960களின் பிற்பகுதியிலிருந்து தோ பாயோ லோரோங் 1ல் செயல்பட்ட அந்தப் பள்ளி, பின்னர் பள்ளிகள் இணைப்பைத் தொடர்ந்து 2002 ஜனவரியில் தோ பாயோ லோரோங் 8க்கு இடம்மாறியது.
அந்தப் பள்ளிக் கட்டடம் இடிக்கப்படுவதற்கு முன்பு பல்வேறு பள்ளிகளின் இடைக்கால இடமாக இருந்தது.
அந்தப் பகுதியில் அதிக அடர்த்தியான குடியிருப்பு இருக்கும் என்று ஆணையம் கூறியது. அருகில் உள்ள போக்குவரத்து வசதிகளால் எதிர்காலக் குடியிருப்பாளர்கள் பயனடைவார்கள் என்று ஆணையம் சுட்டியது.
திட்டமிடப்பட்டுள்ள குடியிருப்பில், குடியிருப்பாளர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் சில்லறை வர்த்தக இடங்கள் போன்ற வசதிகள் இருக்கும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையப் பேச்சாளர் கூறினார். தயாரானதும் முழுவிவரங்களும் அறிவிக்கப்படும் என்றார் அவர்.
தோ பாயோவில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் தற்போதைய தேவையை பூர்த்தி செய்யப் போதுமானவை என்று ஆணையம் குறிப்பிட்டது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளா அல்லது கொண்டோமினிய குடியிருப்பா என்பதைப் பொறுத்து, இப்பகுதியில் 850 வீடுகளுக்கு மேல் கட்டப்படக்கூடும் என்று சொத்து ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இந்த இடம் கேல்டிகாட் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே உள்ளது. வட்ட ரயில் பாதை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைகளிலும் வடக்கு-தெற்கு ரயில் பாதையின் பிரேடல் எம்ஆர்டி அருகேயும் உள்ளது.
இது மேம்பாட்டாளர்களையும் வீடு வாங்குவோரையும் ஈர்க்கும் என்று ஈஆர்ஏ ரியாலிட்டியின் ஆய்வு, ஆலோசனைப் பிரிவின் தலைவர் நிக்கலஸ் மேக் குறிப்பிட்டார்.
இந்தப் பகுதியிலிருந்து 2 கிலோமீட்டருக்குள் சில பிரபலமான பள்ளிகள் உட்பட பல பள்ளிகள் உள்ளதால், இங்கு கட்டப்படும் வீடுகள் பெற்றோர்களிடையே பிரபலமாகும் என்றார் அவர்.
பொது வீடமைப்புக்குப் பயன் படுத்தப்படுவதற்குப் பதிலாக தனியார் குடியிருப்பு மேம்பாட்டாளரிடம் இந்த இடம் விற்கப்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக திரு மேக் கூறினார்.
தோ பாயோவில் ஏற்கெனவே பல வீவக வீடுகள் இருப்பதைக் குறிப்பிட்ட ஆரஞ்ச்டீ அண்ட் டையின் ஆய்வு, பகுப்பாய்வுத் துறையின் மூத்த துணைத் தலைவர் திருவாட்டி கிறிஸ்டின் சன், நகரத்தில் தனியார் வீடுகளுக்கான தேவை அதிகம் என்றார்.
முதிர்ச்சியடைந்த, எம்ஆர்டி நிலையத்திற்கு அருகாமையில் இடம் இருப்பதால், அங்கு அத்தகைய வசதி பிரபலமாகும்.
இப்பகுதியில் மறுவிற்பனை வீடுகளின் விலை ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதால் பொது வீடமைப்புக்குப் பயன்படுத்தப்பட்டாலும் தேவை அதிகமாகவும் இருக்கும்.
இப்பகுதியில் 2022 மே மாதம் அறிவிக்கப்பட்ட 'பிடிஓ' வீட்டுத் திட்டமான 'கிம் கியட் ஹைட்சி'ல் 385 வீடுகளுக்கு 2,483 விண்ணப்பதாரர்கள் போட்டியிட்டனர் என்பதை அவர் சுட்டினார்.
இப்பகுதியில் ஏறக்குறைய 1,000 கொன்டோமினிய வீடுகள் அல்லது 1,300 வீவக அடுக்குமாடி குடியிருப்புகள் வரை கட்லாம் என்பது அவரது மதிப்பீடு.
பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்புப் பகுதிக்கு அருகே மற்றொரு பிடிஓ திட்டமான 'தோ பயோ ரிட்ஜ்' 920 வீடுகளுடன் தற்போது கட்டப்பட்டு வருகிறது.
அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் வளர்ச்சிக்கு வழிகாட்டும் நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டத்தின் அடிப்படையில், தோ பாயோ மேற்குப் பகுதியில் அதிகமான வீடுகள் உள்ளன.
மேலும், தோ பாயோ லிங்கின் இருபுறமும் நிலப்பரப்புகளும் வீடமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

