மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று சிங்கப்பூர் வருகிறார். சென்ற நவம்பர் 24ஆம் தேதி மலேசியாவின் 10வது பிரதமராகப் பதவியேற்ற பிறகு திரு அன்வார் சிங்கப்பூருக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரத்துவ பயணம் இது.
மலேசியாவின் நிதி அமைச்சருமான திரு அன்வார், அதிபர் மாளிகையில் நடைபெறும் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொள்வார் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதிபர் ஹலிமா யாக்கோப்பை சந்திக்கும் மலேசியப் பிரதமர், பிரதமர் லீ சியன் லூங்குடன் பேச்சு நடத்துவார். அன்வாருக்கு திரு லீ மதிய விருந்தளிப்பார்.
திரு அன்வாரின் வருகை, சிங்கப்பூர்- மலேசியா இரு நாடுகளுக்கும், மக்களுக்கும் இடையே உள்ள நெருக்கமான, நீடித்த உறவைக் கோடிட்டுக் காட்டுவதாக வெளியுறவு அமைச்சு கூறியது.
திரு அன்வாரின் ஒருநாள் பயணத்தின்போது இரு தலைவர்களும் மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள்.
சிங்கப்பூர் வர்த்தக தொழில் அமைச்சு, மலேசியாவின் அனைத்துலக வர்த்தக தொழில் அமைச்சு ஆகியவற்றுக்கு இடையே மின்னிலக்கப் பொருளியல், பசுமைப் பொருளியல் குறித்த ஒப்பந்தங்கள்; சிங்கப்பூரின் தொடர்பு தகவல் அமைச்சு, மலேசியாவின் தகவல் தொடர்பு மின்னிலக்க அமைச்சு ஆகியவற்றுக்கு இடையே தனிநபர் தரவு பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, மின்னிலக்கப் பொருளியல் ஆகியவற்றில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகும்.
திரு அன்வாருடன் மலேசிய வெளியுறவு அமைச்சர் சாம்பிரி அப்துல் காதிர், போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், அனைத்துலக வர்த்தக, தொழில்துறை அமைச்சர் தெங்கு சஃப்ருல் அஸிஸ், தகவல் தொடர்பு மின்னிலக்க அமைச்சர் ஃபாமி ஃபாட்சில், சரவாக் முதலமைச்சர் ஜொஹாரி தும் அபாங், ஜோகூர் முதலமைச்சர் ஓன் ஹஃபிஸ் கசியும் வருகை தரவுள்ளதாக அமைச்சின் அறிக்கை கூறியது.
முன்னதாக ஜனவரி மாதம் மலேசியாவில் திரு அன்வாரைச் சந்தித்த வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், இரு நாடுகளுக்கும் இடையிலான உன்னதமான நீண்டகால உறவுகளை மறுவுறுதிப்படுத்தினார்.
கொவிட்-19 கொள்ளைநோய் பரவலால் இடையூறுகள் ஏற்பட்டபோதிலும் வர்த்தகம் தொடர்ந்து வளர்ந்து வருவதாக அவர் கூறினார். 2021ல், இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் $128 பில்லியன் ஆகும்.
இருதரப்புத் திட்டங்களில் ஒன்றான ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு போக்குவரத்துச் சேவை 2026 இறுதியில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருவநிலை மாற்றங்களை குறைப்பது, கரிம தடங்களை குறைப்பது, மின்னிலக்கம் மற்றும் பசுமைப் பொருளியல் போன்ற துறைகளில் புதிய இருதரப்பு ஒத்துழைப்புகள் முக்கியமானவை என்று டாக்டர் விவியன் கூறினார்.
கடந்த நவம்பர் மாதம் பிரதமர் பதவி ஏற்றபோது திரு அன்வாரை வாழ்த்திய பிரதமர் லீ சியன் லூங், விரைவில் சிங்கப்பூர் வருமாறு அழைத்திருந்தார்.
பசுமை, மின்னிலக்கப் பொருளியல்கள் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்கள் வணிகங்களுக்கும் மக்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எம்ஜிஆரைப் போற்றிய அன்வார் - பக்கம் 7

