நியூசிலாந்தின் வடக்குத் தீவில் கனமழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று நான்காக உயர்ந்தது. 1.6 மில்லியன் மக்கள் வசிக்கும் நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் சென்ற வெள்ளிக்கிழமையிலிருந்து வானத்தைக் கிழித்துக் கொண்டு மழை கொட்டித் தீர்க்கிறது. சாலைகளில் வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நிலப் பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது.
வானிலை முன்னறிவிப்புகளை அடுத்து, இன்றும் மிக மோசமான வானிலையை எதிர்பார்க்கலாம் என்று ஆக்லாந்து அவசரகால நிர்வாக கட்டுப்பாட்டாளர் ரேச்சல் கேலஹர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆக்லாந்திலிருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைடோமோ மாவட்டத்தில் நேற்று முன்தினம் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இது வடக்குத் தீவின் பெரும் பகுதிகளையும் உள்ளடக்கியது. வைடோமோ மாவட்டத்தில் அடைமழையினால் வெள்ளமும் சாலைகளில் சறுக்கல், சேதங்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு போக்குவரத்து நிர்வாகம், சாலை மூடல்களில் உதவி வருவதாக காவல் துறை கூறியது.
ஆயிரக்கணக்கான கட்டடடங்களில் மின்சாரம் இன்றியும் நூற்றுக்கணக்கான கட்டங்களில் தண்ணீர் விநியோகம் இன்றியும் இருப்பதாக அதிகாரிகள் நேற்று கூறினர்.

