பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பள்ளிவாசலில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 45க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 150க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உயிரிழந்தோரில் பெரும்பாலோர் காவல்துறை அதிகாரிகள் என்றும் அவர்கள் நண்பகல் தொழுகைக்காகக் கூடியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மாநிலக் காவல்துறை, பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு ஆகியவற்றின் தலைமையகங்கள் அமைந்திருக்கும் வளாகத்திற்குள் அந்தப் பள்ளிவாசல் இருப்பதாக பெஷாவர் மாநிலக் காவல்துறைத் தலைவர் இஜாஸ் கான் கூறினார்.
தாக்குதல்காரர் தனது உடலில் வெடிபொருளைப் பிணைத்துக்கொண்டு அங்கு வந்து அதை வெடிக்கச் செய்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை என்றார் அவர். பள்ளிவாசலுக்குள் சிறிதளவு வெடிபொருள் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.
தாக்குதல் நடந்த நேரத்தில், ஏறக்குறைய 260 பேர் அங்கு இருந்ததாகக் கூறப்பட்டது.குண்டு வெடித்ததால் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததாகத் தெரிகிறது. சிலர் அந்த இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மீட்புப் பணிகள் தொடர்கின்றன. பாகிஸ்தானிய உள்துறை அமைச்சர் ரானா சனாவுல்லா, விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் கூறின.

