சிங்கப்பூரர்கள் மூப்படையும்போது தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், காக்கவும் உதவும் தேசிய அளவிலான திட்டம் கூடுதலானோரைச் சென்றடையவிருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் நிரம்பிய அரை மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு இது உதவும்.
'நன்றாக வாழ்வோம், சிறப்புடன் முதுமையடைவோம்' என்பது இத்திட்டத்தின் பெயர். சுகாதார மேம்பாட்டு வாரியமும் மக்கள் கழகமும் இதை இணைந்து நடத்துகின்றன.
2015ல் அறிவிக்கப்பட்ட வெற்றிகரமாக மூப்படைதல் எனும் சிங்கப்பூரின் செயலாக்கத் திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட அங்கமாக இது அமையும். வயதான சிங்கப்பூரர்கள் நீண்டகாலம் பணிசெய்யவும் சமூகத்துடன் தொடர்பில் இருக்கவும் வழிவகுப்பது இதன் நோக்கம்.
ஹவ்காங்கில் உள்ள சி யுவான் சமூக மன்றத்தில் நேற்று நடைபெற்ற இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கலந்துகொண்டார். மூப்படைதல் தொடர்பான அம்சங்களுக்கான அமைச்சர்நிலைக் குழு இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
சிங்கப்பூரில் 2030ஆம் ஆண்டில் நான்கில் ஒருவர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயது நிரம்பியவராக இருப்பார். சிங்கப்பூரர்களின் ஆயுட்காலம் அதிகரித்திருப்பதும் தம்பதியர் குறைவான எண்ணிக்கையில் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதும் இதற்குக் காரணங்கள். முதியோரில் கூடுதலானோர் தனியாக வசிப்பர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
'நன்றாக வாழ்வோம், சிறப்புடன் முதுமையடைவோம்' திட்டத்தின்கீழ் இதயம், ரத்த நாளங்கள் ஆகியவற்றின் செயல்திறனை அதிகரிக்க உதவும் 'ஏரோபிக்ஸ்' வகையான உடற்பயிற்சி, சீனப் பாரம்பரிய மருத்துவ முறையிலான 'சி கோங்' உடற்பயிற்சி போன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
இவற்றுடன், மனநலம் குறித்துக் கற்பிக்கும் பயிலரங்குகளும் இடம்பெறும். சமூக மன்றங்கள், துடிப்புடன் முதுமையடைவதற்கான நிலையங்கள் போன்றவற்றில் இவை தற்போது படிப்படியாக அறிமுகம் செய்யப்படுகின்றன.
'நன்றாக வாழ்வோம், சிறப்புடன் முதுமையடைவோம்' திட்டத்தில் கூடுதலானோரை இணைப்பதற்கு அரசாங்கம் முயலும் வேளையில், இவ்வாண்டுப் பிற்பாதியில் தொடங்கப்படும் 'ஹெல்தியர் எஸ்ஜி' திட்டத்திலும் அதிகமானோர் பதிவு செய்வர் என்று நம்புவதாக அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.
'ஹெல்தியர் எஸ்ஜி' திட்டத்தின்கீழ், 60ம், அதற்கு மேற்பட்ட வயதும் நிரம்பியவர்கள் குடும்ப மருத்துவர் ஒருவருடன் பதிவுசெய்துகொள்ளும்படி அழைப்பு விடுக்கப்படும். அவர்களுக்குத் தனிப்பட்ட பராமரிப்புத் திட்டத்தை உருவாக்குவது இதன் நோக்கம்.
மேலும், 'நன்றாக வாழ்வோம், சிறப்புடன் முதுமையடைவோம்' திட்டத்தின்கீழ், முதிய ஊழியர்களைப் பணியமர்த்துவதை ஊக்குவிக்கும் வகையில் மானியம், நிதியுதவித் திட்டம் ஆகியவை மேலும் விரிவுபடுத்தப்படும். மாத சம்பளமாக $4,000 வரை பெறும் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தினால் அளிக்கப்படும் சம்பள உதவி திட்டம் 2025ஆம் ஆண்டுவரை நீட்டிக்கப்படும்.
கடந்த 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த சம்பள உதவித் திட்டத்தின்கீழ், 55 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு இந்த ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் எட்டு விழுக்காடு வரை அரசாங்கம் நிதியுதவி வழங்கும்.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி ஏறக்குறைய $450 மில்லியன் சம்பள உதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 460,000 மூத்த ஊழியர்களும் 100,000 நிறுவனங்களும் பலனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
பகுதிநேர மறுவேலைவாய்ப்புத் திட்டம், நீக்குப்போக்கான வேலைத் திட்டம் ஆகியவற்றை நிறுவனங்கள் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இதற்கான மானியமும் 2025ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதிபெறும் ஒவ்வொரு மூத்த ஊழியருக்கும் நிறுவனம் $2,500 சம்பள ஆதரவைப் பெற இது வகைசெய்யும்.
கடந்த 2015ல் மக்கள்தொகையில் எட்டில் ஒருவர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயது நிரம்பியவராக இருந்தார். அப்போது அரசாங்கம் $3 பில்லியன் மதிப்புள்ள வெற்றிகரமாக மூப்படைதல் எனும் திட்டத்தை அறிவித்தது. மூத்தோர் கற்றல், தொண்டூழியம், யாரையும் சாராமல் வாழ்தல் ஆகிய வாய்ப்புகளைப் பெற அது கைகொடுத்தது.
தற்போது மறுஆய்வு செய்யப்பட்ட இத்திட்டம் கூடுதலான சமூக திட்டங்களில் கவனம் செலுத்துகிறது. இதன் தொடர்பில், 40க்கு மேற்பட்ட சந்திப்புகளில் 5,000க்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களிடம் கருத்தறியப்பட்டது. வருங்கால முதியோர் கல்வி அறிவும் தொழில்நுட்ப அறிவும் உடையவர்களாகவும் வேறுபட்ட நடவடிக்கைகளில் ஆர்வமுடையோராகவும் இருப்பர் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
பராமரிப்பு, பங்களிப்பு, தொடர்பில் இருத்தல் எனும் மூன்று அம்சங்களில் மறுஆய்வு செய்யப்பட்ட செயலாக்கத் திட்டம் கவனம் செலுத்தும். சிங்கப்பூரர்கள் வாழ்க்கையை நிறைவுடன் வாழ உதவுவது இதன் நோக்கம்.
'ஸ்போர்ட் சிங்கப்பூர்' அமைப்பு, முதியோரும் இளையர்களும் இணைந்து ஈடுபட உதவும் வகையில் மறுவடிவமைக்கப்பட்ட விளையாட்டு அம்சங்களைக்கொண்ட விளையாட்டிடத்தை உருவாக்கும் எனக் கூறப்பட்டது.
மேலும் செய்தி பக்கம் 2ல்

