சிங்கப்பூர்- மலேசியாவுக்கு இடையிலான அதிவேக ரயில் திட்டத்தை மீண்டும் தொடங்க மனுதாரர் விண்ணப்பம்
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான அதிவேக ரயில்சேவைத் திட்டம் ரத்து செய்யப்பட்டதன் தொடர்பில் மலேசியாவின் முன்னாள் பிரதமர்களான மகாதீர் முகமது, முகைதீன் யாசின் இருவர்மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்ட்டுள்ளது.
அவ்விருவரும் ஒவ்வொரு மலேசிய குடிமகனுக்கும் ஒரு மில்லியன் ரிங்கிட் (S$308,000) இழப்பீடாக வழங்கவேண்டும் என்றும் வழக்கில் கோரப்பட்டது. அத்துடன், அந்த ரயில் சேவைத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்ப்பட்டது. மலேசியாகினி, மலாய் மெயில் ஆகியவை நேற்று அதைத் தெரிவித்தன.
பொருளியலுக்குப் பொறுப்பு வகித்த முன்னைய பிரதமர் அலுவலக அமைச்சர் முஸ்தபா முகமது, முன்னைய போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் ஆகியோருக்கும் எதிராக அழைப் பாணை விடுக்க கோரப்பட்டது.
முகமது ஹட்டா சன்சூரி எனும் 46 வயது மலேசியர் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி வழக்கைத் தொடுத்துள்ளார்.
2018 செப்டம்பர் 5ஆம் தேதி, ரயில்சேவைத் திட்டத்தைத் தள்ளி வைக்க முடிவு எடுத்ததில் டாக்டர் மகாதீர் அலட்சியமாகவும் பதவியில் கடமை தவறியும் நடந்துகொண்டார் என்று வழக்கில் கூறப்பட்டது. அதனால் மலேசியா சிங்கப்பூருக்கு 46 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு தந்தது.
மேலும், 2020ல் அத்திட்டத்தை ரத்து செய்த திரு முகைதீன் அலட்சியம் காட்டி, கடமை தவறினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விளைவாக சிங்கப்பூருக்கு 320 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு தரப்பட்டது.
முகமது ஹட்டா ஏற்கெனவே 2021ல் மலேசிய அரசாங்கத்தின்மீது வழக்கு தொடுத்துள்ளார்.
பெட்ரா பிராங்கா தீவு சிங்கப்பூருக்குச் சொந்தமென அனைத்துலக நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மீதான மறுஆய்வு மனுவை மலேசிய அரசாங்கம் மீட்டுக்கொண்டதற்கு எதிராக அவர் வழக்கு தொடுத்தார்.

