'ஐஎம்எஃப்' எனப்படும் அனைத்துலக பண நிதியம் 2023க்கான சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பைக் குறைத்திருக்கிறது.
சிங்கப்பூர் பொருளியல் இவ்வாண்டு 1.5 விழுக்காடு வளர்ச்சி அடையும் என்று நிதியம் முன்னுரைத்தது. இது கடந்த ஆண்டு காணப்பட்ட 3.7 விழுக்காடு வளர்ச்சியைவிட குறைவாகும்.
சிங்கப்பூருடன் மற்ற ஆசியான் நாடுகளின் வளர்ச்சி முன்னுரைப்பையும் நிதியம் குறைத்துள்ளது. சீனா அதன் பொருளியலை மீண்டும் திறந்துவிடத் தொடங்கியுள்ளபோதும் உலகப் பொருளியலில் ஏற்பட்டுள்ள மெதுவடைவை அதனால் ஈடு கட்ட முடியாது என்று நிதியம் கூறியது.
பண நிதியத்தின் தலைமைப் பொருளியல் நிபுணர் பியேர்-ஒலிவியேர் கோரிஞ்சாஸ் அந்த விவரங்களை நேற்று தெரிவித்தார். நிதியம் அதன் உலகப் பொருளியல் முன்னுரைப்பை வெளியிட்டதை ஒட்டி சிங்கப்பூரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.
சிங்கப்பூர் பொருளியல் 2023ல் 3.7 விழுக்காடு வளர்ச்சி அடையும் என்று ஆணையம் கடந்த அக்டோபரில் முன்னுரைத்திருந்தது. ஆனால் சிங்கப்பூரின் பெரும்பாலான முக்கிய வர்த்தகப் பங்காளி நாடுகளில் பொருளியல் வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் குடியரசின் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பும் குறைக்கப்பட்டதாக டாக்டர் கோரிஞ்சாஸ் கூறினார்.
சிங்கப்பூரின் இந்த ஆண்டுப் பொருளியல் வளர்ச்சி 0.5 விழுக்காட்டுக்கும் 2.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு ஏற்கெனவே முன்னுரைத்திருந்தது. நிதியத்தின் நேற்றைய முன்னுரைப்பு அதை ஒத்துள்ளது.
அதே வேளையில், உலகப் பொருளியல் இவ்வாண்டு 2.9 விழுக்காடு வளர்ச்சி அடையும் என்று பண நிதியம் நேற்று கூறியது.
கடந்த அக்டோபரில் நிதியம் முன்னுரைத்த 2.7 விழுக்காடு வளர்ச்சி முன்னுரைப்பைவிட இது சற்று அதிகம்.
வாடிக்கையாளர்களின் மீட்சியையும் சீனப் பொருளியல் மீண்டும் திறந்துவிடப்படுவதையும் நிதியம் அந்த உயர்வுக்குக் காரணங்களாகச் சுட்டியது.
2022ல் மூன்று விழுக்காடு மட்டும் வளர்ச்சி கண்ட சீனப் பொருளியல், இவ்வாண்டு 5.2 விழுக்காடு அதிகரித்து மீட்சி அடையும் என்று நிதியம் எதிர்பார்த்து வருகிறது.
ஆனால் சிங்கப்பூரின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளான அமெரிக்காவிலும் ஐரோப்பா விலும் இவ்வாண்டு பெரிதான வளர்ச்சி இருக்காது.
அமெரிக்கப் பொருளியல் 2023ல் 1.4 விழுக்காடு வளர்ச்சி பெறும் என்று நிதியம் கூறியுள்ளது. அது 2022ல் காணப்பட்ட இரண்டு விழுக்காடு வளர்ச்சியைவிடக் குறைவாகும்.
"வர்த்தகத்துக்கு திறந்த மனப்பான்மையுடன் இருப்பதே சிங்கப்பூருக்கும் ஆசியாவின் மற்ற பல பெரிய பொருளியல்களுக்கும் முக்கியம். இந்நாடு, உலக நடப்புகளால் அதிகத் தாக்கத்தை எதிர்நோக்கக்கூடிய பொருளியலாகும்," என்று டாக்டர் கோரிஞ்சாஸ் குறிப்பிட்டார்.
பணவீக்கம் உயர்ந்திருக்கும்
சிங்கப்பூரில் இவ்வாண்டு பணவீக்கம் உயர்ந்திருக்கும் என்றும் 2023 தொடக்கத்தில் பொருள், சேவை வரி உயர்த்தப்பட்டது அதற்கொரு காரணம் என்றும் டாக்டர் கோரிஞ்சாஸ் தெரிவித்தார். பணவீக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் சிங்கப்பூர் நாணய ஆணையம் அதன் நிதிக் கொள்கைகளை இறுக்கமாகவே வைத்திருக்கும் என்றார் அவர்.
அத்துடன், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் ஆகிய ஐந்து நாடுகளும் 2023ல் கூட்டாக 4.3 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று நிதியம் முன்னுரைத்துள்ளது. இது கடந்த ஆண்டு ஏற்பட்ட 5.2 விழுக்காடு வளர்ச்சியைவிட குறைவாகும்.
மேலும் செய்திகள்:
5ஆம், 7ஆம் பக்கங்கள்

