ரச்சனா வேலாயுதம்
‘ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்புக்கு ஆதரவாக 18 வயது மாணவர் முகம்மது இர்ஃபான் டன்யால் முகம்மது நூர், சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் ஆயுதம் ஏந்தி வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தார். சுய தீவிரவாதச் சிந்தனையால் தூண்டப்பட்ட இர்ஃபான், கடந்த டிசம்பர் மாதம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.
தனது நம்பிக்கைக்கு எதிரானவர்களைக் கத்தியால் குத்திக் கொல்லவும் அமோய் குயீ முகாமில் பலர் மீதான தாக்குதல் ஒன்றை நடத்தவும் இர்ஃபான் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
முகாமில் காரைக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்காக இர்ஃபான் ஆள் தேடவிருந்ததாகவும் கூறப்படுகிறது. இவற்றுடன் தஞ்சோங் பகாரில் உள்ள ஹஜி முகம்மது சலே பள்ளிவாசலின் இடுகாட்டைக் குறிவைத்து ‘சி4’ வெடிகுண்டுக் கருவி ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டிருந்ததாக நம்பப்படுகிறது.
சிங்கப்பூரின் கோனி தீவை, ‘ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பின் ஒரு மாநிலமாகப் பிரகடனப்படுத்தவும் இர்ஃபான் திட்டமிட்டிருந்தார்.
தனது தேசிய மாணவர்ப் படை சீருடை, தானே தயாரித்த ‘ஐஎஸ்’ கொடி, தலைப் பட்டை ஆகியவற்றுடன் ‘ஐஎஸ்’ அமைப்பின் தலைவருக்குத் தனது விசுவாசத்தைத் தெரிவிக்கும் உறுதிமொழியைக் கடந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதியன்று இர்ஃபான் எடுப்பதற்கு சில தினங்களுக்கு முன் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (ஐஎஸ்டி) அதிகாரிகள் இர்ஃபானைக் கைது செய்தனர்.
இர்ஃபானின் தாக்குதல்கள் பற்றியோ அல்லது வெளிநாட்டில் ஆயுதமேந்தி வன்முறையில் ஈடுபடும் நோக்கம் பற்றியோ இர்ஃபானின் குடும்ப உறுப்பினர்கள் அறிந்திருக்கவில்லை என்றும் கண்டறியப்பட்டது.
ஸாகிர் நாயக், அகமது டீடத் போன்ற சமய தீவிரவாத போதனையாளர்களின் யூடியூப் காணொளிகளைக் கண்டு, அவர் சுயதீவிரவாதப் போக்கிற்கு மாறியதாகக் கூறப்பட்டது.
இதன் தொடர்பில் ஜூ சியாட்டில் உள்ள காலித் பள்ளிவாசலில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம்.
“கைதானபோது வன்முறையில் இறங்க வேண்டும் என்பதில் இர்ஃபான் உறுதியாக இருந்தார். எங்களது மதிப்பீட்டின்படி, அவர் கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பிருந்ததாகக் கருதுகிறோம்.
“பாதுகாப்புக்கு உடனடியாக அச்சுறுத்தல் அளிப்பவராக அவரைக் கருதியதால் கைதுசெய்தோம்,” என்று அமைச்சர் சண்முகம் கூறினார்.
இர்ஃபான் பனிச்சறுக்கு முகமூடியால் தன் முகத்தை மறைத்தவாறு 2021ன் பிற்பாதியில் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள தொடங்கினார். இஸ்லாமிய ஆன்மிகத் தலைவராக வாழவேண்டும் என்று 2021ஆம் ஆண்டின் பிற்பாதியில் முடிவெடுத்தார்.
அதையடுத்து கடந்தாண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று தானே வடிவமைத்த கொடி ஒன்றை கோனி தீவில் நட்டார். அக்கொடி அல் காய்தா தொடர்புடைய தீவிரவாத அமைப்பு ஒன்றோடு தொடர்புடையதாகும்.
சிங்கப்பூரின் தேசிய தினத்தன்று கொடியைக் காட்டும் படங்களைத் தன் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததுடன் மற்றவர்களையும் சேரச்சொல்லி இர்ஃபான் அழைப்பு விடுத்ததாக ஐஎஸ்டி கூறிற்று.
முஸ்லிம் அல்லாதோர், ‘ஷியா முஸ்லிம்’, ‘சுஃபி முஸ்லிம்’ ஆகியோரைக் குறிவைத்துத் தாக்கத் திட்டமிட்ட இர்ஃபான், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு கத்தியை வாங்கினார். அங் மோ கியோவில் தேசிய சாரணர் படையின் தலைமையகம் அமைந்துள்ள அமோய் குவீ முகாமிலும் தாக்குதல் நடத்தி, பெரும் சேதத்தை விளைவிக்க அவர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
“தமது திட்டங்களில் ஏதேனும் ஒன்றை அவர் செயல்படுத்தியிருந்தால் உயிருடல் சேதம், சமயங்களுக்கு இடையிலான அவநம்பிக்கை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கக்கூடும்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இர்ஃபான் தனியாகச் செயல்பட்டார் என்றும் மற்றவர்களைத் தன்பக்கம் இழுக்கும் அல்லது சுயதீவிரவாதப் போக்கிற்கு மாற்றும் அவரது முயற்சிகள் கைகூடியதற்கான அறிகுறி தெரியவில்லை என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.