அமெரிக்காவில் கண் சொட்டு மருந்து போட்டுக்கொண்ட ஒருவர் உயிரிழந்தார். இதன் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் அளித்த தகவலை அடுத்து, அம்மருந்தைத் தயாரித்து ஏற்றுமதி செய்த சென்னை நிறுவனத்தில் தமிழக அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
'எரிஸ்கேர் ஆர்ட்டிஃபிசியல் டியர்ஸ்' எனும் அந்தச் சொட்டு மருந்தில் நோயெதிர்ப்புக் கிருமிகள் இருக்கலாம் என்று கூறப்படுவதை அடுத்து, 'குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்' என்ற அந்நிறுவனம், தானாக முன்வந்து சந்தையிலிருந்து அம்மருந்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
அம்மருந்தைப் போட்டுக்கொண்ட மேலும் ஐவரின் பார்வைத்திறன் நிரந்தரமாகப் பறிபோனதாகவும் கூறப்பட்டது.
"அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மருந்துத் தொகுதி களின் மாதிரிகளையும் அதற்கான மூலப்பொருள்களையும் சேகரித்துள்ளோம். திறக்கப்படாத சொட்டு மருந்துப் புட்டிகள் அமெரிக்காவில் இருந்து வருவதற்காகக் காத்திருக்கிறோம். முதற்கட்ட அறிக்கையைத் தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளேன்," என்று தமிழக மருந்துக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் விஜயலட்சுமி 'என்டிடிவி'யிடம் தெரிவித்தார்.
பின்னிரவு 2 மணிக்கு விசாரணை நிறைவுபெற்றது. அந்த மருந்து நிறுவனம், கண் சொட்டு மருந்து தயாரிப்பதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பிட்ட மருந்தைத் தயாரிக்கவும் ஏற்றுமதி செய்யவும் அந்த நிறுவனம் உரிமம் பெற்று இருப்பதை டாக்டர் விஜயலட்சுமி உறுதிசெய்தார்.
அந்தச் சொட்டு மருந்து இந்தியாவில் விற்கப்படவில்லை எனச் சொல்லப்பட்டது.
இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பில் அமெரிக்க உணவு, மருந்து அமைப்புடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாக 'குளோபல் ஃபார்மா' நிறுவனம் தெரிவித்தது. அத்துடன், அந்த மருந்தைப் பயன்படுத்துவதை நிறுத்தும்படியும் அமெரிக்கப் பயனீட்டாளர்களுக்கு அது அறிவுறுத்தி இருக்கிறது.

