மோனலிசா
ஈராண்டுகளுக்குப் பிறகு கொவிட்-19 கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்ந்த நிலையில், தைப்பூசத் திருவிழாவில் உற்சாகமும் பக்திப் பரவசமும் பெருக்கெடுத்தன. காவடி ஊர்வலம் இவ்வாண்டு அனுமதிக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் பக்தியோடும் தைப்பூசத்தைக் கொண்டாடினர்.
முதல் காவடி நேற்று முன்தினம் இரவு மணிக்கு ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலிலிருந்து ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்குப் புறப்பட்டது. பால்குடங்கள் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் கிளம்பின. ஏறக்குறைய 35,000ற்கும் மேற்பட்டவர்கள் திருவிழாவில் கலந்துகொண்டனர் என்று இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்தது.
காலையில் வானம் தெளிவாக இருந்ததால் காவடி ஊர்வலம் சுமூகமாக நடைபெற்றது. ஆனால், பிற்பகலுக்கு மேல் பெய்யத் தொடங்கிய மழை, மாலையில் வலுத்தது. அதனால், காவடி ஊர்வலம் ஒரு மணி நேரம் தாமதமாகி, கடைசிக் காவடி ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலிலிருந்து புறப்பட கிட்டத்தட்ட மாலை 6 மணி ஆகிவிட்டது.
எனினும், அடை மழையும் தொடர்ந்த தூறலும் பக்தர்களின் உற்சாகத்தைக் குறைக்கவில்லை. குடை பிடித்தும் பிடிக்காமலும் பக்தர்கள் பால் குடங்களும் காவடிகளும் சுமந்து சென்று தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
பால் குடம் சுமந்தவர்களில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும் ஒருவர். அவர் ஸ்ரீதெண்டாயுதபாணி கோயிலில் பால்குடம் ஏந்திச் சென்று முருகன் சந்நிதியில் சமர்ப்பித்தார்.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலுக்கு நேற்று காலை 8 மணியளவில் வருகை தந்த டாக்டர் டான் சீ லெங், “தடைகளைக் கடந்து சிறப்பான முறையில் இன்று அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் இவ்விழா நாம் பெரும் துயரிலிருந்து மீண்டு வந்ததன் வெற்றியைக் குறிக்கிறது,” என்று கூறினார்.
சிறுவனாக இருந்தபோது தைப்பூசத் திருவிழாவில் காவடிகளை ஆவலுடன் வேடிக்கை பார்த்த தருணங்களை நினைவுகூர்ந்தபோது அவரிடம் அந்தக் குதூகலம் மீண்டிருந்தது. ஒரு சீன பக்தர் பால்குடம் சுமந்து சென்றதைக் குறிப்பிட்ட அவர், சிங்கப்பூரின் பல இன பல சமய மக்களின் நல்லிணக்கத்தையும் பிணைப்பையும் இது பிரதிபலிக்கிறது என்றார்.
தைப்பூசம் குறித்து பிரதமர் லீ சியன் லூங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.
“பல இன பல சமயங்களை சார்ந்த சமூகமான சிங்கப்பூரில் வெவ்வேறு இனப் பண்டிகைகள் ஒரே தினத்தில் வருவது அரிதல்ல. இந்துக்கள் தைப்பூசத் திருவிழாவை கொண்டாடும் இதே தினத்தில் சீனப் புத்தாண்டின் நிறைவுநாளும் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்ட உணர்வைத் தூண்டும் இப்பண்டிகைகள் மக்களுக்குள் ஒருமைப்பாட்டையும் வளர்க்கும்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவில் ஆக அதிகமாக 13,002 பால்குடங்கள் எடுக்கப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது. மேலும் 180 அலகுக் காவடிகளும் 34 ரதக் காவடிகளும் 216 பால் காவடிகளும் 26 தொட்டில் காவடிகளும் எடுக்கப்பட்டதாகவும் ஏற்பாட்டுக்குழு தெரிவித்தது.
“தைப்பூசத் திருவிழா ஈராண்டுகளுக்கு பிறகு மிகப் பெரிய அளவில் நடைபெறுவதாலும் ஞாயிற்றுக்கிழமையில் அமைந்தமையாலும் அதிக அளவில் பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்,” என்று கூறினார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் ஆர் ஜெயச்சந்திரன்.
“உணவு, தண்ணீர், மருத்துவ வசதி, கூட்ட நெரிசல் கட்டுப்பாடு உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்குமான ஏற்பாடுகள் தயார்நிலையில் இருந்தன. கூடுதலாக 1,300 தொண்டூழியர்களும் கோயில் பணியாளர்களும் தைப்பூசத் திருவிழா இனிதே நடைபெற துணை நின்றனர்,” என்று இந்து அறக்கட்டளை வாரிய தலைமை நிர்வாக அதிகாரி திரு த.ராஜசேகர் கூறினார்.
“ஸ்ரீதெண்டாயுதபாணி கோயிலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், பக்தர்கள் தற்காலிக சந்நிதிகளில் காணிக்கை செலுத்தி மிகுந்த ஒத்துழைப்பை நல்கியது நன்முறையில் திருவிழா நடைபெற பெரிதும் உதவியது,” என்று ஸ்ரீதெண்டாயுதபாணி கோயில் துணைத்தலைவர் ராமசாமி மெய்யப்பன் கூறினார்.
- மேலும் செய்தி பக்கம் 2ல்