சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகியவற்றிலிருந்து இந்தியா செல்வோருக்கு கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்த ஆறு இடங்களில் இருந்து செல்லும் பயணிகள் இனி கிருமித்தொற்று இல்லை என்பதற்கான 'பிசிஆர்' பரிசோதனையை செய்யத் தேவையில்லை.
வரும் திங்கட்கிழமை முதல் இந்நடைமுறை நடப்புக்கு வருவதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது. உலகெங்கும் கொவிட்-19 நோய்ப்பரவல் வெகுவாகக் குறைந்திருப்பதை அமைச்சு சுட்டியது.
இருப்பினும் பயணிகளில் இரண்டு விழுக்காட்டினரை விமான நிலையத்தில் பரிசோதிக்கும் நடைமுறை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சுக்கு இதுகுறித்து இந்திய சுகாதார அமைச்சு தகவல் அனுப்பியுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்திய சுகாதார, குடும்ப நல்வாழ்வுத்துறை அமைச்சின் செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
சென்ற மாதம் 1ஆம் தேதி முதல் இந்த ஆறு இடங்களில் இருந்து இந்தியா செல்லும் பயணிகள் கிருமித்தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகளை இந்திய அரசாங்கத்தின் 'ஏர் சுவிதா' இணையத்தளத்தில் பதிவேற்றுவது கட்டாயமாக்கப்பட்டது. பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்குள் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கவேண்டும்.
மேற்கூறிய இடங்களின் கொவிட்-19 கிருமிப் பரவல் நிலவரத்தைக் கருத்தில்கொண்டு இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக 2022 டிசம்பரில் இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது. 'பிசிஆர்' சான்றிதழ் தேவையில்லை எனும் செய்தி சுற்றுப்பயணிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

