அலாஸ்கா வான்வெளியில் இருந்த அடையாளம் தெரியாத கருவியை அமெரிக்கப் போர் விமானம் சுட்டுவீழ்த்திவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் அமெரிக்க வான்வெளியில் காணப்பட்ட சீனாவுக்குச் சொந்தமான பலூன் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. அமெரிக்காவை வேவு பார்க்க அந்தக் கருவியை சீனா அனுப்பியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால், சீனா அதற்கு மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் ஒரு பகுதியான அலாஸ்காவின் வான்வெளியில் இந்த அடையாளம் தெரியாத கருவி காணப்பட்டது.
அதன் பரப்பளவு ஒரு சிறிய கார் அளவுக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.
"இந்தக் கருவி யாருடையது என்று தெரியவில்லை," என்று வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார். அது எங்கிருந்து வந்தது என்பதுகூட இன்னும் தெரியவில்லை என்றார் அவர்.
அலாஸ்கா வான்வெளியில் இருந்த அந்தக் கருவியைச் சுட்டுவீழ்த்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை கூறியது.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு சுட்டுவீழ்த்தப்பட்ட சீன பலூன் எத்தகைய தகவல்களைப் பெற முயன்றது என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொலைத்தொடர்புக் கருவிகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் உணர்கருவிகள் அந்த பலூனில் இருந்ததாக அவர்கள் கூறினர்.
அந்தக் கருவிகளில் செய்யப்படும் அழைப்புகளை இடைமறிக்கும் ஆற்றல் அந்தப் பலூனுக்கு இருந்ததாக
அமெரிக்கா தெரிவித்தது.

