கொவிட்-19 காலகட்டத்துக்குப் பிறகு முன்னோக்கிச் செல்வதில் இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டம் கவனம் செலுத்தும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்ட திரு வோங், 'புதிய காலகட்டத்தில் ஒன்றிணைந்து முன்னேறுவோம்' என்ற கருப்பொருளை வரவுசெலவுத் திட்டம் கொண்டிருக்கும் என்றார்.
பிரச்சினைகள் சூழ்ந்த உலகில் சிங்கப்பூர் அதன் எதிர்கால வாய்ப்புகளை எவ்வாறு கைப்பற்றும் என்பதைத் திட்டம் எடுத்துரைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். நிதி அமைச்சருமான திரு வோங் வரவுசெலவுத் திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்குத் தாக்கல் செய்வார்.
புதிய வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ள சிங்கப்பூரர்களுக்கு உதவுவது, சமுதாயக் கட்டிறுக்கத்தை வலுப்படுத்துவது, குடும்பங்களுக்கு உறுதிகூறுவது ஆகியவற்றுடன் ஒன்றுபட்ட மக்களாகக் கூட்டாக மீட்சியை உருவாக்குவது வரவுசெலவுத் திட்டத்தின் நோக்கம் என்றார் திரு வோங்.
சிங்கப்பூரில் நேற்று கொவிட்-19 கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்ததையும் திரு வோங் தமது பதிவில் சுட்டினார். கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு கடந்த 9ஆம் தேதி அதை அறிவித்திருந்தது. பொதுப் போக்குவரத்தில் முகக்கவசங்கள் அணியத் தேவையில்லை என்றும் நாட்டு எல்லைகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் என்றும் பணிக்குழு கூறியிருந்தது.
"நாம் ஒன்றுபட்டு ஒரு தலைமுறையின் நெருக்கடியைச் சமாளித்துள்ளோம். பெருந்தொற்றில் இருந்து நாம் மேலும் வலுவாக மீட்சி அடைந்துள்ளபோதும் அதற்குப் பிந்தைய புதிய எதிர்காலத்துக்கு இப்போது ஆயத்தமாக வேண்டும் என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.
"நம் முன்னுள்ள பாதை எளிதானல்ல. ஆனால் நம் ஒட்டுமொத்த முயற்சி, ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை ஆகியவற்றின்வழி செயலாற்றி, எல்லாருக்கும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் மேம்பட்ட வருங்காலத்தைப் பெறுவோம் என்று நம்பிக்கை வைத்துள்ளேன்," என திரு வோங் விவரித்தார்.
உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தில் செய்யப்படும் மேம்பாடுகள் பற்றிய விவரங்கள் வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெறும். $8 பில்லியன் வெள்ளி மதிப்பிலான உத்தரவாதத் தொகுப்புத் திட்டம், பொருள் சேவை வரி உயர்வின் பாதிப்பை மட்டுப்படுத்த அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்பார்த்ததைவிட அதிகம் கூடியுள்ள பணவீக்கத்தையும் கருத்தில்கொண்டு அது வரவுசெலவுத் திட்டத்தில் மேம்படுத்தப்படும்.
'முன்னேறுவோம் சிங்கப்பூர்' கருத்தறியும் நடவடிக்கையில் கிடைக்கப்பெற்ற கருத்துகள், யோசனைகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு, அரசாங்கக் கொள்கைகளுக்கு மாற்றங்களும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவுசெலவுத் திட்ட அறிவிப்புகள் பற்றி தமிழ் முரசின் இணையத்தளத்திலும் சமூக ஊடகத் தளங்களிலும் விரைந்து வெளியிடப்படும் தகவல்களைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

