மலேசியாவின் செலயாங் மருத்துவமனையில் நேற்று நடுத்தர வயது ஆடவரைக் கத்தியால் குத்தியவர் மன நோயாளி என்று அந்நாட்டு சுகாதாரத் துறைத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். மனநோயாளியான ஆடவரைக் காவல்துறையினர் பின்னர் கட்டுப்படுத்தினர்.
சம்பவம் குறித்த தவறான தகவல் பரவும் முன், கத்தியால் குத்தியவர் மனநோயாளி என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புவதாக டாக்டர் நூர் ஹிஷாம் 'த ஸ்டார்' நாளேட்டிடம் குறிப்பிட்டார்.
இத்தகைய சம்பவங்கள் எங்கும் நடக்கும் சாத்தியம் இருப்பதை அவர் சுட்டினார். மன நோயாளிகளைக் கையாள்வது தொடர்பான செயல்முறை விதிகள் குறித்து சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்யும் என்றார் அவர்.
செலயாங் மருத்துவமனையில் காத்திருந்த நேரத்தில் மன நோயாளி எரிச்சல் அடைந்ததாகக் கூறப்பட்டது.
மருத்துவமனை வார்டுகளில் படுக்கைகள் நிரம்பியிருந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் காத்திருக்க நேர்ந்தது.
இதனால் சினமுற்ற அவர், தாதியர்க்கான சிற்றுண்டிச் சாலையில் இருந்த கத்தியை எடுத்து, அங்கிருந்த டெங்கி நோயாளியான நடுத்தர வயது ஆடவரை மூன்றுமுறை கத்தியால் குத்தினார்.
முதுகில் ஒருமுறையும் அடிவயிற்றுப் பகுதியில் இருமுறையும் அவர் கத்தியால் குத்தியதாகக் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஆடவருக்கு இதனால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. கத்தியால் குத்திய ஆடவர் மருத்துவமனையின் மனநோயாளிகள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்த மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தஃபா நேற்று நாடாளுமன்றக் கூட்டத்திற்குப் பிறகு செலயாங் மருத்துவமனைக்கு விரைந்தார்.
கத்திக்குத்துச் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
நோயாளியின் நிலைமை குறித்து குடும்பத்தினருக்கு அவ்வப்போது தகவல் தரப்படும் என்றார் அவர்.
அமைச்சருடன் சிலாங்கூர் மாநில சுகாதார இயக்குநர், மருத்துவமனை இயக்குநர், பாதிக்கப்பட்ட ஆடவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆகியோரும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைச் சந்தித்தனர். ஆடவருக்கு ஆகச் சிறந்த சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்யும் முயற்சிகள் குறித்து குடும்பத்தினரிடம் அவர்கள் எடுத்துக் கூறினர்.
இவ்வேளையில், மனநோயாளியான ஆடவர் இவ்வாறு கத்தியால் குத்தியதற்கான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கத்தியால் குத்திய மன நோயாளி 22 வயது ஆடவர் என்றும் பாதிக்கப்பட்ட ஆடவரின் வயது 29 என்றும் சிலாங்கூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

