உடல், மன ரீதியில் பாதிப்பை ஏற்
படுத்தும் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இக்குற்றங்களின் எண்ணிக்கை 19,343லிருந்து 20,193ஆக அதிகரித்தது. மானபங்கக் குற்றங்களின் எண்ணிக்கை 2021ல் 1,474ஆக இருந்தது. கடந்த ஆண்டு அது 1,610ஆக ஏற்றம் கண்டது.
2022ஆம் ஆண்டில் நிகழ்ந்த கிட்டத்தட்ட பத்தில் ஆறு (58.3 விழுக்காடு) மானபங்க சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குற்ற
வாளிகள் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்று காவல்துறை கூறியது.
இரவுநேர கேளிக்கை விடுதிகள், பொதுப் போக்குவரத்து ஆகியவற்றில் மானபங்கம் ஆக அதிகமாக நிகழ்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இரவுநேர கேளிக்கை விடுதிகளில் 129 மானபங்கக் குற்றங்கள் நிகழ்ந்ததாக காவல்துறை கூறியது. 2021ஆம் ஆண்டில் 21 மானபங்கக் குற்றங்கள் மட்டுமே நிகழ்ந்தன.
2021ஆம் ஆண்டில் பொதுப் போக்குவரத்தில் 163 மானபங்கக் குற்றங்கள் நிகழ்ந்தன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 178ஆக ஏற்றம் கண்டது.
மற்றவர்களுக்குத் தெரியாமல் அவர்களை முறையற்ற வகையில், பாலுணர்வைத் தூண்டும் வகையில் படம் அல்லது காணொளி எடுக்கும் குற்றங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறிதளவு குறைந்துள்ளது. 2021ல் இந்த எண்ணிக்கை 467ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு 424ஆக குறைந்தது.
இத்தகைய குற்றங்கள் ஆக அதிகமாக குடியிருப்புகள் (142 சம்பவங்கள்), பொதுப் போக்குவரத்து (55 சம்பவங்கள்) கடைத்தொகுதிகள் (54 சம்பவங்கள்) ஆகிய இடங்களில் நிகழ்ந்தன. குடியிருப்புகளில் நிகழ்ந்த இத்தகைய குற்றங்களுக்குப் பெரும்பாலும் சொந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஒன்றாக வாடகைக்கு இருப்பவர்கள் போன்றவர்களே காரணம். இவர்களில் பலர், பாதிக்கப்பட்டோர் கழிவறையைப் பயன்படுத்தியபோது அவர்களுக்குத் தெரியாமல் ஒளிந்
திருந்து பார்த்ததாகக் கூறப்படுகிறது.
பொதுப் போக்குரத்தில் நிகழ்ந்த இத்தகைய குற்றச் செயல்களைப் பொறுத்தவரை, சக பயணிகளின் குட்டைப் பாவடைக்குள் படமெடுத்தல் அதிகமாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடைகளில் திருடும் குற்
றங்கள் கடந்த ஆண்டு அதிகரித்தது. 2021ஆம் ஆண்டில் இந்தக் குற்றங்
களின் எண்ணிக்கை 2,652ஆக இருந்தது. கடந்த ஆண்டில் இது 3,244ஆக உயர்ந்தது. கடைகளில் திருடும் குற்றங்களைப் பொறுத்தவரை, மூன்றில் இரண்டு குற்றச் செயல்கள் (67 விழுக்காடு) சில்லறை வர்த்தகக் கடைகளில் நிகழ்ந்தன. உணவுப் பொருள்கள், பானங்கள், மதுபானங்கள், சுய பராமரிப்புப் பொருள்கள், துணிகள், அழகு சாதனங்கள் போன்றவை அதிகம் திருடப்பட்டதாக காவல்துறை கூறியது.
குடியிருப்புகள் அல்லது வர்த்தக இடங்களில் நிகழ்ந்த திருட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 2021ஆம் ஆண்டில் 1,359ஆக இருந்த இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 1,729ஆக ஏற்றம் கண்டது.
881 திருட்டுக் குற்றங்கள் குடி
யிருப்புகளிலும் 503 திருட்டுக் குற்றங்கள் வர்த்தக இடங்களிலும் நிகழ்நதன. குடியிருப்புகளிலிருந்து அதிகம் திருடப்பட்ட பொருள்களில் ரொக்கம், நகைகள், கைபேசிகள், பைகள், கைக்கடிகாரங்கள் போன்றவை அடங்கும். இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரில் பெரும்பாலானோர் அவ்விடங்களில் வாடகைக்கு இருப்பவர்கள், ஒரே அறையில் தங்குபவர்கள், குடும்ப உறுப்பினர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள்.
கலவரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் 46 கலவரங்கள் நிகழ்ந்தன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 60ஆக அதிகரித்தது. கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இரவுநேர கேளிக்கை விடுதிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பலர் ஒன்றுகூடுவது மீண்டும் தொடங்கிவிட்டதால் இத்தகைய குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக காவல்துறை தெரிவித்தது. இதற்கிடையே, மற்ற குற்றங்களைக் காட்டிலும் மோசடிக் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. மோசடிக் குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் இம்மாதம் 8ஆம் தேதிவெளியிடப்பட்டன. 2021ல் 23,933ஆக இருந்த மோசடிக் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 31,728ஆக அதிகரித்தது. இது 32.6 விழுக்காடு அதிகரிப்பாகும். சில குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளபோதிலும் சிங்கப்பூரில் குற்றச் செயல்
களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறையின் செயல்முறைப் பிரிவின் தற்காலிக இயக்கு
நரான உதவி ஆணையர் கிரெகரி டான் தெரிவித்தார்.

