ஆள்மாறாட்டம் செய்து சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற பயணிகளின் எண்ணிக்கை
ஆள்மாறாட்டம் செய்து அல்லது முன்னைய பயணங்களின்போது பயன்படுத்தாத அடையாளத்தைக் கொண்டு சிங்கப்பூருக்குள் நுழைய முயலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, சிங்கப்பூர் கடந்த ஆண்டில் தனது எல்லைகளை மீண்டும் முழுமையாகத் திறந்துவிட்டதை அடுத்து இப்போக்கு அதிகரித்து இருக்கிறது.
முந்திய 2021ஆம் ஆண்டில் 28 பேர் இப்படி ஆள்மாறாட்டம் செய்து வேறு அடையாளங்களைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றனர்.
இந்நிலையில், சென்ற ஆண்டில் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 15 மடங்கு கூடி, 441 ஆனது.
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) நேற்று வெளியிட்ட ஆண்டுப் புள்ளிவிவர அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
"ஆள்மாறாட்டம் செய்து அல்லது தங்களது முன்னைய சிங்கப்பூர் பயணங்களின்போது பயன்படுத்தாத வேறு அடையாளத்தைப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால், சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்; சிங்கப்பூருக்கு மீண்டும் வரவும் தடை விதிக்கப்படும்," என்று ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
உயிரளவை (பயோமெட்ரிக்) தொழில்நுட்பத்தின் மூலம் அத்தகைய பயணிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது. குடிநுழைவு அனுமதிக்குக் கருவிழி அமைப்புகளையும் முக அடையாளங்களையும் முதன்மையான அடையாளங்களாக அத்தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது.
அப்படி ஆள்மாறாட்டம் செய்த அல்லது அடையாளத்தை மாற்றிய பயணிகளில் பலரும் விசா காலம் முடிந்த பின்னரும் கூடுதல் காலம் தங்கியிருந்தோர் அல்லது நாடுகடத்தப்பட்டோர் அல்லது சிங்கப்பூரில் இருந்தபோது பல்வேறு குற்றம் புரிந்தோர் அல்லது குற்றம் புரிய முயன்றோர் எனக் கூறப்பட்டது.
அதுபோல், 21 பேர் போலி அல்லது திருத்திய பயண ஆவணங்கள் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

