கடந்த ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த அல்லது இங்கிருந்து கிளம்பிச் சென்ற பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தது.
கடந்த 2022ஆம் ஆண்டில், 104.9 மில்லியன் பயணிகளுக்கு வருகை மற்றும் புறப்பாட்டு அனுமதி வழங்கப்பட்டது. இது 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் ஏறக்குறைய 17 மடங்கு அதிகம். 2021ஆம் ஆண்டில் 5.9 மில்லியன் பயணிகளே குடிநுழைவுச் சோதனையைக் கடந்தனர்.
சென்ற டிசம்பர் மாதம் பள்ளி விடுமுறைக் காலத்தில் நிலச் சோதனைச்சாவடிகளைக் கடந்தோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட கொவிட்-19 பரவலுக்கு முன்பு இருந்த நிலையை எட்டியது. அம்மாதத்தில் துவாஸ், உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிகள் வழியாக நாள்தோறும் 400,000 பேர் சென்றனர்.
விண்ணப்பங்கள் குவிந்தன
எல்லைகள் திறக்கப்பட்டதால் அனைத்துலகப் பயணம் மேற்கொள்ளலாம் என்ற ஆவலில், கடப்பிதழ் கோரி விண்ணப்பங்கள் குவிந்தன.
முந்திய 2021ஆம் ஆண்டில் 300,000 கடப்பிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில், சென்ற ஆண்டு 1.25 மில்லியனுக்கும் அதிகமான கடப்பிதழ்கள் வழங்கப்பட்டன.
"கொவிட்-19 பரவலின்போது ஈராண்டுகாலம் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் சிங்கப்பூரர்கள் பலரும் காலாவதியான கடப்பிதழ்களைப் புதுப்பிக்கவில்லை," என்று ஆணையம் தெரிவித்தது.
கடப்பிதழ் விண்ணப்பங்கள் குவிந்ததால், அவற்றை விரைந்து பரிசீலிக்க ஏதுவாக வேறு பிரிவுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 ஊழியர்கள் அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது. வாரம் ஏழுநாளும் 24 மணி நேரமும் அப்பணி மேற்கொள்ளப்பட்டது.

