உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பதவியை இந்திய வம்சாவளியினர் அலங்கரிப்பது தொடர்கிறது. அவ்வகையில், இந்திய அமெரிக்கரான நீல் மோகன், 49 (படம்), `யூடியூப்' காணொளிப் பகிர்வுத் தளத்தின் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.
உலகின் ஆகப் பெரிய காணொளித்தளமான யூடியூப்பின் இப்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான சூசன் வோய்சிச்கி, அப்பதவியிலிருந்து தாம் விலகவிருப்பதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் மின்னியலில் பொறியியல் பட்டம் பெற்ற திரு மோகன், பின்னர் ஸ்டான்ஃபர்ட் வணிகக் கழகத்தில் எம்பிஏ பயின்றார்.
இவர் கடந்த 1996ஆம் ஆண்டு `அக்சென்சர்' நிறுவனத்தில் தமது வாழ்க்கைத்தொழிலைத் தொடங்கினார்.
பின்னர் `நெட்கிராவிட்டி' எனும் புதிய நிறுவனத்தில் இவர் இணைந்தார். பிறகு அந்நிறுவனத்தை இணைய விளம்பர நிறுவனமான `டபுள்கிளிக்' வாங்கியது. கடந்த 2007ஆம் ஆண்டில் `டபுள்கிளிக்'கை கூகல் நிறுவனம் வாங்கியது.
யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவியேற்க இருக்கும் திரு மோகன், இதற்குமுன் அந்த நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரியாகச் செயல்பட்டார்.
இதையடுத்து, சுந்தர் பிச்சை (கூகலின் தாய் நிறுவனமான அல்ஃபபெட்), சத்ய நாதெல்லா (மைக்ரோசாஃப்ட்), சந்தீப் கட்டாரியா (பாட்டா), லக்ஷ்மண் நரசிம்மன் (ஸ்டார்பக்ஸ்), சாந்தனு நாராயண் (அடோபி), அரவிந்த் கிருஷ்ணா (ஐபிஎம்) என, முன்னணிப் பெருநிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் இருக்கும் இந்திய வம்சாவளியினர் பட்டியலில் திரு மோகனும் இணைகிறார்.

