கொவிட்-19 கிருமிப் பரவலைக் கையாண்ட முறை குறித்து வல்லுநர்கள்
உலகெங்கும் கடந்த மூன்று ஆண்டுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது கொவிட்-19 கிருமிப் பரவல். கிட்டத்தட்ட 6.84 மில்லியன் பேர் இதற்கு பலியானார்கள்.
நிலைமை படிப்படியாக மேம்பட்டு இப்போது சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற அளவிற்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் கிருமிப் பரவலைக் கையாண்ட முறை குறித்து விரைவில் அரசாங்கம் விரிவான அறிக்கையை வெளியிடும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் இம்மாதம் 9ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
இவ்வேளையில் கொவிட்-19க்கு எதிரான போரில் துணைநின்ற வல்லு நர்கள் சிலரிடம் கருத்தறிந்தது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ். சிங்கப்பூர் எந்த நடைமுறைகளில் சிறப்பாகச் செய்தது, எதில் இன்னும் மேம்பட்ட வகையில் செயல்பட்டிருக்கலாம் என்று கேட்டறிந்தது.
கருத்துரைத்த 11 வல்லுநர்களில் ஆறு பேர், சிங்கப்பூருக்கு 'ஏ' தர நிலையைத் தந்தனர். மேலும் மூன்று பேர் 'ஏ-' தரநிலையையும் இருவர் 'பி+' தரநிலையையும் வழங்கினர்.
கிருமிப் பரவலால் ஏற்பட்ட மிரட்டலை விரைந்து உணர்ந்தது, அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய எதிர்கொள்ளலுக்கு உடனடி நடவடிக்கைகள் எடுத்தது ஆகிய இரண்டு அம்சங்களும் சிங்கப்பூரின் சிறப்பான செயல்பாடு தொடர்பான பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
கிருமித்தொற்றைச் சமாளிப்பதற்கான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு அமைக்கப்படுவதற்கு முன்பே சிங்கப்பூர் கவனத்துடன் செயல்படத் தொடங்கிவிட்டது.
தொடர்புத் தடம் அறிதல், தனிமைப்படுத்தல், தங்கும் இடத்தை விட்டு வெளியேறுவதற்கான தடை ஆகிய நடவடிக்கைகளால், தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லாத காலகட்டத்தில் கிருமித்தொற்று அதிகம் பரவாமல் தடுக்க முடிந்ததை வல்லுநர்கள் சுட்டினர்.
அதிக விலை கொடுத்தாவது முன்கூட்டியே தடுப்பூசிக்கு முன்பதிவு செய்த சிங்கப்பூரின் தொலைநோக்கையும் பெரிய அளவிலான தடுப்பூசித் திட்டத்தையும் அவர்கள் பாராட்டினர்.
நிறுவனங்களும் குடும்பங்களும் பொருளியல் இடையூறுகளைச் சமாளிக்க அரசாங்கம் வழங்கிய ஆதரவுத் திட்டங்களை வல்லுநர்கள் குறிப்பிட்டனர். சமூகத்தின் ஆதரவும் கிருமிப் பரவலைத் தடுக்கப் பெரிதும் உதவியதை அவர்கள் சுட்டினர்.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் கிருமிப் பரவலை மேம்பட்ட முறையில் கையாண்டிருக்கலாம் என்பது அனைத்து வல்லுநர்களின் கருத்து.
தனியார் சுகாதாரப் பராமரிப்புத் துறையினரை கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் சிங்கப்பூர் மெதுவாகவே இணைத்ததையும் அவர்களுக்குத் தேவையான மருத்துவக் கருவிகள் மெதுவாகவே வழங்கப்பட்டன என்பதையும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டினர்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், சிங்கப்பூர் கொவிட்-19 தொடர்பான மரணங்களைக் கட்டுப்படுத்தியதால் சிறப்பான தரநிலையை வழங்கலாம்.
பொருளியல் பாதுகாப்பு நடவடிக்கைகள், சுகாதாரக் கட்டமைப்பு செயலிழக்காமல் காத்தது போன்ற அம்சங்களில் சிங்கப்பூர் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. இருப்பினும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் கிருமிப் பரவல் மோசமடைந்தது உள்ளிட்ட சில காரணங்களால் 'ஏ+' தர நிலையை வழங்க இயலவில்லை என்று வல்லுநர்கள் கூறினர்.

