சிங்கப்பூரின் வெவ்வேறு இனத்தவருக்குக் குறிப்பிட்ட சில மருத்துவச் சிக்கல்களும் மருந்து தொடர்பான பாதக விளைவுகளும் ஏற்படுவதை மரபணு ரீதியாக அடையாளம் காணும் புதிய ஆய்வு ஒன்று 10,000 பேரை உள்ளடக்கிய வண்ணம் மேற்கொள்ளப்பட்டது.
மரபியல் ரீதியாக ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நோய் ஏற்படும் அபாயத்தைப் பற்றி மேலும் நன்கு புரிந்துகொள்ள முடியும். அதையடுத்து இவ்வாண்டு பிற்பாதியில் நடப்புக்கு வரவுள்ள ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ திட்டத்தின் கீழ் நோய் தொடர்பான பாதுகாப்புப் பராமரிப்பு உத்தியையும் மேம்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்த தலைமுறையினரின் ரத்தத்தில் அதிகக் கொழுப்பளவு இருக்கக்கூடிய மரபணுப் பிரச்சினை, இந்தியர், மலாய்க்காரரைக் காட்டிலும் சீனரிடையே ஏற்படும் சாத்தியம் அதிகம் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஆய்வில் பங்கேற்ற சீனர்களில் இந்த மருத்துவப் பிரச்சினை தொடர்பான பிறழ்வுகள் ஏற்படும் சாத்தியம் 1.05% என்றும் இந்தியர்களிடையே இது 0.15% என்றும் தெரிவிக்கப்பட்டது.
மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை தொடர்பான பிறழ்வுகள் இந்தியர், சீனரைக் காட்டிலும் மலாய்க்காரர்களிடையே ஏற்படுவது அதிகம் என்றும் ஆய்வு கூறியுள்ளது. மலாய்க்காரர்களிடையே மார்பக, கருப்பை புற்றுநோய் தொடர்பான பிறழ்வுகள் ஏற்படுவது 0.25% என்றும் சீனரிடையே 0.02% என்றும் இந்தியர்களிடையே அறவே இல்லை என்றும் கண்டறியப்பட்டது.
ஆய்வின் முடிவுகள் ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற அறிவியல் நாளேட்டில் கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது. ஆய்வில் பங்கேற்றோரின் சராசரி வயது 47 ஆகும். இதில் 57.3 விழுக்காட்டினர் மாதர் என்றும் குறிப்பிடப்பட்டது.
வலிப்பு நோயைத் தடுப்பதற்கான மருந்து, ‘கீமோதெரபி’ போன்ற சிகிச்சைகள் தொடர்பில் குறிப்பிட்ட சில மரபணு உடையவர்களுக்குப் பாதக விளைவுகள் ஏற்படுவதையும் ஆய்வு அடையாளம் கண்டிருந்தது.
ஆய்வில் பங்கேற்ற 26.8 விழுக்காட்டினரிடம் மரபியல் ரீதியாக இருந்த திரிபால் குறைந்தது ஒரு மருந்தால் பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பிட்ட ஒருவரிடம் இத்தகைய மரபியல் திரிபு இருப்பதை அறிவதன் மூலம் இத்தகைய மருந்துகளை வழங்கும்போது ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளைத் தணிக்க முடியும் என்று ஆய்வை மேற்கொண்ட ‘பிரிசைஸ்’ தெரிவித்தது.
பிள்ளை பெற்றுக்கொள்ள திட்டமிடும் தம்பதியர், தங்களின் இனம் சார்ந்த மரபியல் நோய்களைப் பற்றி மேலும் புரிந்துகொள்வது பயன் தரும் என்று ஆய்வின் முதன்மை ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் சௌமியா ஷேகர் ஜமுவார் குறிப்பிட்டார்.
இத்தகைய ஆய்வு முக்கியம் என்றும் உலக மக்கள்தொகையில் ஆசியர்கள் 60 விழுக்காட்டினர் என்றும் ‘பிரிசைஸ்’ நிர்வாக இயக்குநர் பேட்ரிக் டான் சுட்டினார். அடுத்த கட்டமாக 100,000 பேருக்கு இந்த ஆய்வுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இதனால் அரிய நோய்களுக்கு ஆளாவது தொடர்பான மரபியல் அம்சங்களை மட்டும் ஆய்வாளர்கள் கண்டறியாமல் பலரிடையே காணப்படும் நீரிழிவு நோய் போன்றவற்றைப் பற்றியும் ஆராய்ந்திட முடியும் என்று ஆய்வின் தலைமை முதன்மை ஆய்வாளரான துணைப் பேராசிரியர் லிம் வெங் கோங் குறிப்பிட்டார்.