உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பதின்ம வயதினர் இருவர் மீது நடவடிக்கை
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், பதின்ம வயது இளையர் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருவரில் ஒருவருக்கு வயது 15. சிங்கப்பூரில் இவ்வாறு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டோரில் ஆக இளையவர் இவர்.
உயர்நிலை மூன்றாம் வகுப்பில் பயின்ற இவ்விளையர் சுயமாக தீவிரவாத சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டார். சிங்கப்பூரில் புகழ்பெற்ற சுற்றுப்பயணத் தலங்களில் கத்திக்குத்து தாக்குதல் நடத்த இவர் திட்டமிட்டிருந்தார். முஸ்லிம் அல்லாதோரின் தலைகளைத் துண்டிப்பது இவரது திட்டம்.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, 16 வயதாகும் மற்றோர் இளையருக்குக் கட்டுப்பாட்டு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்கீழ் இவருக்கு நடமாட்டக் கட்டுப்பாடும் பொதுவெளியில் கருத்துரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு இளையர்களையும் சேர்த்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட 21 வயதுக்குக் குறைவானோரின் எண்ணிக்கை 11 ஆனது. இந்தப் போக்கு கவலையளிப்பதாக உள்துறை அமைச்சு கூறியது. இந்த 11 பேரில் ஏழு பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். நான்கு பேருக்குக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட இளையர் இருவரும், சென்ற ஆண்டு டிசம்பரில் தடுத்து வைக்கப்பட்ட 18 வயது இளையர் முகமது இர்ஃபான் டேன்யல் முகமது நூருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்பட்டது.
15 வயது இளையர், சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட ஸிம்பாப்வே போதகர் சலாஃபியின் உரைகளைச் செவிமடுத்ததாகக் கூறப்பட்டது. வெளிநாட்டினர் சிலருடன் தொடர்புகொண்ட பிறகு இவரது தீவிரவாத நம்பிக்கைகள் வலுத்தன. ஷியா முஸ்லிம்கள், சூஃபி முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதோர் ஆகியோர்மீது ஆயுதமேந்தித் தாக்குதல் நடத்தவும் இஸ்லாமியச் சட்டம் நடப்பில் இருக்கும் ஆஃப் கானிஸ்தானுக்குச் செல்லவும் முடிவெடுத்தார்.
நண்பர்கள் சிலரைத் தீவிரவாதத்தின் பக்கம் ஈர்க்க முயன்று தோல்வியுற்றார்.
16 வயது இளையரின் நடவடிக்கைகளை 2020ஆம் ஆண்டு முதலே உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கண்காணித்து வருகிறது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகும் இவர் தீவிரவாதத்தைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.
தீவிரவாத, பயங்கரவாதக் குழுக்கள் இளையர்களைக் குறிவைத்து செயல்படுவதாக உள்துறை துணையமைச்சர் ஃபைஷல் இப்ராஹிம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். கேடு விளைவிக்கும் இத்தகைய இணையத் தகவல்களில் இருந்து நம் குழந்தைகளைப் பாதுகாக்க அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்றார் அவர்.

