ஊழல் வழக்குகள் தொடர்பில் பாரபட்சமின்றி அனைத்துக் கட்சியினரையும் விசாரணைக்கு உட்படுத்தும்படி அமலாக்க அதிகாரிகளுக்குத் தாம் உத்தரவிட்டிருப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.
தமது கெஅடிலான் (பிகேஆர்) கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல என்றார் அவர். தமது கட்சி உறுப்பினர்கள் யாரேனும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தாம் நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்றும் திரு அன்வார் உறுதியளித்தார்.
இஸ்லாமியக் கொள்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படாது என்று மட்டுமே தம்மால் உறுதியளிக்க முடியும் என்று மலேசியப் பிரதமர் கூறினார்.
லஞ்சம், ஊழல் ஆகியவை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டாலும் தாம் மன்னிப்புக் கோரப்போவதில்லை என்றார் அவர்.
தாம் விமர்சிக்கப்படுவது குறித்து அறிந்திருப்பதாகக் கூறிய அவர், ஊழல் நடவடிக்கைகளில் தமக்குத் தொடர்பு இல்லை என்பதை சுட்டினார்.
"எதிர்த்தரப்பு தாங்கள் ஊழலற்றவர்கள் என்று கூறுகின்றனர். ஆனால் அது பொய் என்பது நிரூபிக்கப்பட்டது.
"பிகேஆர் கட்சி 100 விழுக்காடு தூய்மையானது என்று என்னால் உறுதியாகக் கூற இயலாது. எனவே பிகேஆர் உள்பட அனைத்துக் கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி அமலாக்க அதிகாரிகளிடம் கூறியிருக்கிறேன்," என்றார் பிரதமர் அன்வார்.
பாஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அகமது ஃபத்லி ஷாரி, ஊழல் வழக்கில் தொடர்புள்ள அமைச்சர்கள் மீது பிரதமர் நடவடிக்கை எடுப்பாரா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கையில் திரு அன்வார் இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்வரை அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது என்றார் அவர்.
அம்னோ தலைவரும் மலேசியத் துணைப் பிரதமருமான அகமது ஸாகித் ஹமிடி மீதான ஊழல் வழக்குகள் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த திரு அன்வார், வழக்கை நீதிமன்றம் விசாரித்துவரும் நிலையில் தாம் அதில் தலையிட விரும்பவில்லை என்றும் கூறினார்.
திரு ஸாகித்தை துணைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்ததன் தொடர்பில் திரு அன்வார் குறைகூறல்களை எதிர்நோக்குகிறார்.
இருப்பினும், திரு ஸாகித் தமது அரசாங்கத்தின் கொள்கைகளைப் பின்பற்றுவதாக மலேசியப் பிரதமர் வலியுறுத்தினார்.
"திரு ஸாகித்தின் துறையின்கீழ் செயல்படும் சில அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்கள் ஏலக்குத்தகை விடுக்காமலே உடனடியாக வேலை தொடங்க அனுமதி கேட்டிருந்தன. ஆனால் திரு ஸாகித், அரசாங்கக் கொள்கைகளுக்கு ஏற்ப, முறைப் படி ஏலக் குத்தகை விடப்படவேண்டும் என்று அந்நிறுவனங்களிடம் உறுதியாகத் தெரிவித்ததாகத் திரு அன்வார் கூறினார்.

