மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் பெரிய அளவிலான தேசிய வரவுசெலவுத் திட்டத்தை இன்று தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முந்திய அரசாங்கம் கடந்த அக்டோபர் மாதம் உத்தேசித்திருந்த 373.2 பில்லியன் ரிங்கிட் (S$112 பில்லியன்) திட்டத்தைக் காட்டிலும் அதிக மதிப்பிலான வரவுசெலவுத் திட்டமாக அது அமையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
மெதுவடைந்து வரும் நாட்டின் வளர்ச்சியையும் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினத்தையும் கருத்தில் கொண்டு புதிய வரவுசெலவுத் திட்டம் வரையப்படலாம்.
மேலும் வரும் ஜூலை மாதம் ஆறு மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலையும் இந்த வரவு செலவுத் திட்டம் கருத்தில் கொள்ளும். சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்கள் அவை.
மலேசியாவின் மொத்த வாக்காளர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் இந்த ஆறு மாநிலங்களில் உள்ளனர். இதில் மூன்று மாநிலங்கள் திரு அன்வார் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியிடமும் இதர மூன்று மாநிலங்கள் பெரிக்காத்தான் நேஷனலின் கூட்டணியில் உள்ள பாஸ் கட்சி வசமும் உள்ளன. பிரதமர் அன்வாரின் ஒற்றுமை அரசாங்கம் இந்த மக்களின் மனநிறைவைப் பெறுவது அவசியமாகிறது.
எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் கடந்த ஆண்டு நாட்டின் பொருளியல் மீட்சியடைந்ததால் அதன் மூலம் கிடைத்திருக்கும் கூடுதல் வருவாயைக் கொண்டு மக்களுக்கான அதிக செலவினங்களை நிதி அமைச்சருமான திரு அன்வார் சேர்க்கக்கூடும்.
நாட்டின் வளர்ச்சி இவ்வாண்டு 4 விழுக்காட்டுக்கும் 5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்ட அளவில் மெதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அதேவேளையில் வருவாய் தொடர்ந்து ஏற்றம் காணும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதனால் 2023 வரவுசெலவுத் திட்டம் பெரியதாக இருக்கலாம் எனற தகவல் வெளியாகி உள்ளது.

