ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான போரை நிறுத்தும்படி சீனா அழைப்பு விடுத்துள்ளது. அதன் தொடர்பிலான 12 அம்சப் பரிந்துரையை சீன வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்டிருக்கிறது.
பகைமையை முடிவுக்கொண்டு வருதல், அணு உலைகளைப் பாதுகாத்தல், அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்குதல், ஒருதலைப் பட்சமான தடைகளை அகற்றுதல் போன்றவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஆனால் உக்ரேனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தரப்பினர் இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வது கடினம் என்றே கருதப்படுகிறது. ரஷ்யாவும் உக்ரேனும் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது தொடர்பில் இணக்கம்காண அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டுள்ளது.
கூடிய விரைவில் நேரடிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கினால் பதற்றம் தணியவும் அதைத் தொடர்ந்து விரிவான சண்டை நிறுத்தம் ஏற்படவும் அது வழிவகுக்கும் என்று அப்பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டை அந்தப் பரிந்துரையில் பெய்ஜிங் பட்டியலிட்டுள்ளது. ஆனால் உக்ரேனின் கிழக்கு வட்டாரத்தில் ரஷ்யா கைப்பற்றிய நிலப்பகுதி குறித்து அதில் பேசப்படவில்லை.
உக்ரேனிய எல்லைகளில் இருந்து ரஷ்யா பின்வாங்கும்வரை போரிடப்போவதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியின் அரசாங்கம் சூளுரைத்துள்ளது.
மாஸ்கோ அதன் தாக்குதல்களை நிறுத்துவதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை.
பல்லாயிரக் கணக்கானோர் பலியான இந்தப் போரில் மில்லியன் கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
போரை நிறுத்துவது தொடர்பில் சீனா நடுநிலையோடு செயல்படும் என்று உக்ரேனுக்கோ அதை ஆதரிக்கும் நாடுகளுக்கோ நம்பிக்கை இல்லை.
நேற்று முன்தினம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐக்கிய நாட்டுத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் சீனா கலந்துகொள்ளவில்லை.
அமைதிக்குப் பரிந்துரைக்கும் சீனாவின் திட்டங்களை ஐரோப்பியத் தலைவர்கள் பலரும் சந்தேகக் கண்கொண்டே பார்க்கின்றனர்.
ரஷ்யாவிற்கு சீனா ஆயுதம் வழங்கக்கூடும் என்று அமெரிக்கா கவலை தெரிவித்தது. அதனை நிராகரித்த சீனா வாஷிங்டன் உக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவதாகக் கூறியது.
சீன அதிபர் ஸி ஜின்பிங், இந்தப் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கியுடன் பேச்சு நடத்தவில்லை.
இருப்பினும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் நான்கு முறை அவர் பேச்சு நடத்தினார். சீனாவின் அமைதித் திட்டத்தை மதிப்பிடுவதற்கு முன்பாக சீன அதிபரைச் சந்தித்துப் பேச விரும்புவதாக உக்ரேனிய அதிபர் தெரிவித்துள்ளார்.

